சிறிலங்கா இராணுவத்தால் சூடப்பட்டவரை பார்வையிட்டார் கஜன்!

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார்

இன்று (15) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 22) என்ற இளைஞள், கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்தார்.

இதனையடுத்து, குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் தெரிவிக்கையில், “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடடிப்பட்டு காயமடைந்துள்ளார்.

அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இராணுவத்தினர் வழிமறித்தனர். எனினும் அதனை மீறி சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல் துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.