விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை கேலி செய்த நபர்!

அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நான்கு காவல் துறை அதிகாரிகளை காப்பாற்றாமல் கேலி செய்த நபர் தற்போது விசாரணை எதிர்கொள்கிறார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் மாத இறுதியில் இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கொண்ட ஒரு காவல் துறை குழு, அசுர வேகத்தில் பறந்த ஒரு போர்ஷே வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.

விசாரணையில் 41 வயதான Richard Pusey என்ற அந்த நபர் அதிகமான போதைமருந்தும் உட்கொண்டிருந்தது தெரியவந்தது. சாலையோரத்தில் நடைபெற்று வந்த இந்த விசாரணை, அடுத்த சில நிமிடங்களில், விக்டோரியா மாகாண காவல் துறை  துறைக்கு வரலாற்றில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய சம்பவமாக அமைந்தது.

அந்த வழியாக பாய்ந்து வந்த ஒரு லொறி கட்டுப்பாட்டை இழந்து, ரிச்சார்டிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நான்கு காவல் துறை அதிகாரிகள் மீது மோதியது.

இச்சம்பவத்தின்போது, காவல் துறையிடம் இருந்து கொஞ்சம் விலகி நின்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த ரிச்சார்ட் சிறு காயமின்றி தப்பினார்.

மட்டுமின்றி இதனையடுத்தே ரிச்சார்டின் கோர முகம் வெளிப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த நான்கு காவல் துறை அதிகாரிகளையும் மோசமாக திட்டிய ரிச்சார்ட், அவர்கள் துடித்துடிப்பதை தமது மொபைல் கமெராவில் பதிவு செய்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தை தாம் கொண்டாடப் போவதாகவும், விருந்துக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும் அவர் கேலி செய்துள்ளார்.

உயிருக்கு போராடும் காவல் துறை காப்பாற்ற முயலாமல், அவர்களை கேலியும் கிண்டலும் செய்யும் ரிச்சார்டின் நடவடிக்கைகள், ஆனால் குற்றுயிராக கிடந்த ஒரு பெண் காவல் துறை அதிகாரியின் உடையில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் 3 நிமிடங்கள் வரை பதிவாகியுள்ளது.

இதனிடையே, விபத்தில் சிக்கிய காவல் துறை தொடர்பில் எவருக்கும் தகவல் அளிக்காமல் சம்பவயிடத்தில் இருந்து மாயமான ரிச்சார்ட், தமது குடியிருப்புக்கு சென்று, பதிவான அந்த காணொளி தமது நண்பருடன் பகிர்ந்து கொண்டு, மீண்டும் கேலி செய்துள்ளார்.

சாலை விபத்தில் காவல் துறை சிக்கி மரணமடைந்த தகவல் தெரியவந்த சில மணி நேரத்தில், காவல் துறை ரிச்சார்டை கைது செய்துள்ளனர்.

திங்களன்று, ரிச்சார்ட் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர், தமது வாடிக்கையாளர், விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமலே, தகவல் தர மறந்ததாகவும், சூழலை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் வாதிட்டுள்ளார்.

இதனிடையே சாலை விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி மோஹிந்தர் சிங் பஜ்வா, விபத்துக்குப் பிறகு சுயநினைவை இழந்தார்.

இந்த வழக்கில் வாகன சாரதியான அவர், வாகனம் ஓட்டுவதில் காட்டிய அலட்சியத்திற்கு பதிலளிக்க வேண்டும் என மெல்போர்ன் நீதிமன்றம் கோரியுள்ளது