ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி ராஜினாமா

ஆஸ்திரேலியாவில் அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளியை பின்பற்றாத டிரேவர் வாட்ஸ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு இலாகாவின் நிழல் மந்திரியாக பதவி வகித்து வந்தவர் டிரேவர் வாட்ஸ். (பிரதான எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்கப்படும் மந்திரி அந்தஸ்து நிழல் மந்திரி எனப்படும்) இவர், தேசிய விடுதலை கட்சியை சேர்ந்தவர். டிரேவர் வாட்ஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சட்டமன்ற தொகுதியான வடக்கு டூம்பாவோ நகரின் விரைவு வழிச்சாலையில் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவரும் 2 காவல் துறை அதிகாரிகளும் கொரோனா ஊரடங்கையொட்டி மாகாண அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளி கட்டாயம் என்கிற உத்தரவை மீறியதாக கூறப்படுகிறது.

இது ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டிரேவர் வாட்ஸ் உள்ளிட்ட மூவருக்கும் தலா 1,334 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 67 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது.

மந்திரியே அரசு உத்தரவை மீறிவிட்டதால் அவர் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்தது.

இந்த நிலையில், டிரேவர் வாட்ஸ் தனது மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக டான் புருடி என்பவர் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு நிழல் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.