வாட்ஸ்அப் க்ரூப் கால் அப்டேட் – இனி எட்டு பேருடன் உரையாடலாம்

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் எட்டு பேர் பங்கேற்க செய்யும் புதிய அப்டேட் வெளியிடப்படுகிறது.

உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. குறுந்தகவல் செயலியாக மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.
இதுவரை வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலை நிலவியது. தற்சமயம் இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் அதிகப்படுத்தி இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் க்ரூப் வீடியோ கால் சேவைக்கான தட்டுப்பாடு அதிகரித்து இருக்கும் நிலையில் வாட்ஸ்அப் க்ரூப் கால் அம்சத்தில் மாற்றம் செய்ய இருக்கிறது.
வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்
வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் போது எட்டு பேரை பங்கேற்க செய்யும் அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. புதிய அம்சம் வாட்ஸ்அப்  ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட்டு விட்டது. விரைவில் இதற்கான ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.
பயனர்கள் க்ரூப் கால் செய்ய வாட்ஸ்அப் க்ரூப் சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம். அழைப்பை மேற்கொண்டதும் வாட்ஸ்அப் க்ரூப் கால் அம்சத்தை இயக்கி விடும். இதுதவிர, பயனர்கள் கால்ஸ் டேப் சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து க்ரூப் கால் செய்யலாம்.