கணவரின் புகைப்படங்களை நீக்கியது ஏன்?

நடிகை சுவாதி தனது கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம் பெற்ற “கண்கள் இரண்டால்.. உன் கண்கள் இரண்டால்… என்னை கட்டி இழுத்தாய்” பாடல் காட்சியில் அவர் நிஜமாகவே கட்டி இழுத்ததாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை ஆகிய படங்களிலும் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
ஐதராபாத்தில் வசித்த சுவாதி 2018-ல் கேரளாவைச் சேர்ந்த விமான பைலட் விகாஷ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே, சுவாதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது திருமண புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென்று நீக்கி விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எதுவும் இல்லை. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களோ? என்று பட உலகில் பேச்சு கிளம்பியது. இருவருக்கும் கருத்து வேறுபாடா? என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பினார்கள்.
கணவருடன் சுவாதி
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சுவாதி, தனக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை. திருமண புகைப்படங்களை பிறருக்கு காண்பிக்காதவாறு இன்ஸ்டாகிராமில் மறைத்து வைத்து இருப்பதாகவும் கூறினார். ஆனாலும் கணவர் புகைப்படங்களை மறைத்து வைத்தது ஏன் என்று ரசிகர்கள் விடாமல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.