திட்டமிட்டதொரு பொருளாதார போரை அமெரிக்கா மீது சீனா தொடுத்துள்ளதா ?

சீனாவை மையப்படுத்தி உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது அமெரிக்கா கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளதுடன் அந்த ஸ்தாபனத்திற்கான நிதி உதவியையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன ? உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதா ? மேலும் உலகில் இவ்வாறானதொரு சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதா ? போன்ற பல கேள்விகள் அனைவர் மத்தியிலும் காணப்படுபவையாகும். மறுப்புறம் ஆயுதப் போராக அல்லாது பொருளாதாரம் மற்றும் உலக தலைமைத்துத்தை மையப்படுத்தியதொரு இராஜதந்திர போரை அமெரிக்கா மீது சீனா தொடுத்துள்ளதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக தற்போதுள்ள டெட்ரோஸ் அதானோம் , கொவிட் 19 வைரஸ் தொற்று உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்த ஆரம்ப கட்ட நிலையில் அதனை உரிய வகையில் கையாண்டு நாடுகளை எச்சரிக்க வில்லை.

அதே போன்று வைரஸ் தீவிரமடைந்த காலக்கட்டத்தில் சீனா அறிவிப்புகளை தனது உத்தியோகப்பூர்வ அறிவிப்பாக கொண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தமையும் பின்னர் உலக நாடுகளில் குறித்த வைரஸ் பரவல் நிலைமை மோசமடைந்த போது பதிவுகளை நீக்கியமை போன்ற சம்பவங்கள் பின்னரான காலப்பகுதியில் சந்தேகங்களை தோற்றுவித்தன.

குறிப்பாக கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்ற சீனாவின் ஆரம்ப நிலை கருத்தினை தனது உத்தியோப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றி குறுகிய காலத்திறற்குள் உலக சுகாதார ஸ்தாபனம் நீக்கியது. அதே போன்று குறித்த வைரஸ் சீனா – ஹுவானிலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கு பரவி அபாய நிலை ஏற்பட்டிருந்த போதிலும் உலக சுகாதார ஸ்தானத்தின் பதிவுகள் பாரதூரதன்மையை அறியாத வகையிலேயே அமைந்தது.

டெட்ரோஸ் அதானோம் உலக சுகாதார அமைப்பின் தலைமைத்துவதற்கு 2017 ஆம் ஆண்டிலேயே தெரிவு செய்யப்படுகின்றார். இவரின் தலைமைத்துவத்தின் போது தான் சீனா தனது ஏக இலக்கான புதிய பட்டு வழிப்பாதையை  உலக சுகாதார நெருக்கடிகளின் போது நாடுகளுக்கிடையிலான மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்த முடியும் என்ற திட்டத்தை முன்மொழிந்தது.

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி பீஜிங்கில் இடம்பெற்ற சுகாதார ஒத்துழைப்பிற்கான புதிய பட்டுப்பாதை மாநாட்டில் டெட்ரோஸ் அதானோம் கலந்துக் கொள்கிறார்.

இங்கு டெட்ரோஸ் அதானோம் உரையாற்றுகையில்

புதிய பட்டுப்பாதை திட்டத்தினை உலக சுகாதார அவசர தேவைகளுக்காக பயன்படுத்த கூடிய சிறந்த திட்டம் </a> என்ற அங்கிகாரத்தினை வழங்கியிருந்தார். அது மாத்திரமன்றி சுகாதார மூலோபாய ஒத்துழைப்பிற்கான சீனாவின் திட்டம் அமைந்துள்ளதுடன் ஆபிரிக்கா வரையிலான இந்த திட்டம் பல நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டில் முழு மூச்சுடன் சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய பட்டுவழிப்பாதை திட்டத்திற்காக இலக்கு வைக்கப்பட்ட சுமார் 70 நாடுகளை உள்வாங்குவதற்கு சீனா கொடுக்காத விலையே இல்லை. உலக அமைப்புகள் பலவற்றின் ஆதரவை பெற்றுக் கொள்ள சீனா எடுத்த முயற்சிகளில் உலக சுகாதார ஸ்தாபனம் முக்கியமானதாகும். இதற்கு சான்று பகிரும் வகையிலேயே சுகாதார ஒத்துழைப்பிற்கான புதிய பட்டுப்பாதை மாநாடு& அமைந்துள்ளது

ஏனெனில் உலக நாடுகளில் வைரஸ் தொற்று போன்ற ஆபத்துக்கள் ஏற்படும் போது , புதிய பட்டு வழிப்பாதையை பயன்படுத்த முடியும் என்ற விடயத்தை , அனைத்துலகிற்கும் இன்று சீனா நிறைவேற்றி காட்டியுள்ளது.இதனையே சீனா 2017 ஆம் ஆண்டில் கணித்து செயற்பட்டது.

மறுப்புறம் தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள டெட்ரோஸ் அதானோம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தை சீனா தனது திட்டத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளதா என்ற சந்தேக நிலையும் அனைத்துலக அவதானத்திற்கு உட்படாமலில்லை . இவ்வாறானதொரு புறச்சூழலில் தான் அமெரிக்கா கடுமையா விமர்சனங்களையும் தீர்மானங்களையும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது எடுத்து வருகின்றது.

அனைத்துலகையும் ஆட்டிவைத்துள்ள கொவிட்-19 நெருக்கடியை , புதிய பட்டு வழிப்பாதையின் நலன்களுக்காக மாத்திரமே சீனா பயன்படுத்துகின்றதா ? என்றால் அது இல்லை. இதுவரையில் உலக தலைமைத்துவத்திற்கு அங்கிகாரம் பெற்றிருந்த அமெரிக்காவின் உலக ஆளுமையை ஆட்டம் காண வைத்து ; அதன் ஆழத்தை அளவிடுவதும் சீனாவின் தந்திரோபாயமாகவே காணப்படுகிறது.

ஏனெனில் அமெரிக்க – சீன பொருளாதார மோதல் என்பது பரந்த வரலாற்றை கொண்டது. ஆனால் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் ஆட்சி உருவாகியதன் பின்னர் சீன – அமெரிக்க பொருளாதார பணிப்போர் ஒரு பதற்ற நிலைக்கு வந்தது. மாத்திரமன்றி இரு தரப்புமே எதிர்மறையான விடயங்களை முன்னெடுத்து வந்தன. அதாவது அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை கொண்ட நாடுகளுடன் முன்பைவிட நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட்டது. அதே போன்று தான் அமெரிக்காவும் தனது அனைத்து நட்பு நாடுகளையும் சீனாவிற்கு எதிராக ஒருநிலைப்படுத்துவதில் குறியாக செயற்பட்டது. புதிய பட்டு வழிப்பாதை திட்டத்ற்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வகையில் இந்து – பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா , ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தது.

சீனாவின் ஹுவாவி போன்ற நிறுவனங்களின் உற்பத்திகள் அமெரிக்காவில் முடக்கப்பட்டு ; கடும் பொருளாதார விதிகளை அமெரிக்கா கையாண்டது ; மறுப்புறம் சீனாவும் விட்டுக் கொடுக்காது செயற்பட தொடங்கியது. சில மேற்குலக உலக நாடுகள் மத்தியில் டொனல்ட் ட்ரம்பின் தீர்மானங்கள் குறித்து காணப்பட்ட விமர்சனங்கள் அமெரிக்கவுடன் எதிர்மறையாக செயற்படும் சீனாவின் போக்கை தீவிரமாக்கியது. மேலும் கொவிட் 19 வரைஸ் தொற்று தீவிரமாகி அதிலிருந்து மீள முடியாது அமெரிக்க தவிக்கையில் அதன் பொருளாதார நிலைகளை குறி வைத்து சீனா தமது இராஜதந்திர நகர்வுகளை மிக தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

மறுப்புறம் உலக வல்லரசாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவினால் தன் மக்களையே வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியாமல் போயுள்ளமையை சீனா வெளியுலகிற்கு காட்டியுள்ளதுதுடன் இதை விட தன்னால் செயற்பட முடியும் என்பதுபோல் சுமார் 100 நாடுகளுக்கு தனது சுகாதார உற்பத்திகளை சீனா இன்று ஏற்றுமதி செய்கின்றது.

உலகின் அதி கூடிய ஏற்றுமதிகளுக்கு உரித்தான நாடென்ற வகையில் சீனாவின் அந்நிய செலாவணியின் இருப்பு வீதம் மிக அதிகமாகும். 2019 ஆம் ஆண்டில் சீனாவிற்கான அமெரிக்க கடன் தொகை 1.07 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாகும் . அந்த வகையில்

அமெரிக்காவிற்கு கடன் வழங்குகின்ற நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கின்றது. அது மாத்திரமல்ல அமெரிக்காவின் பங்கு சந்தை வர்த்தகத்திலும் சீனா பல்வேறு நிறுவனங்கள் ஊடாக உள்நுழைந்துள்ளது.

பல மேற்குலக நாடுகளிலும் சீனா இதே செயற்பாட்டினையே முன்னெடுத்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் அமெரிக்கா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு வர சில காலங்கள் எடுக்கும் . அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார தாழ்வினை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு வரிசையாக சவால்கள் நிறைந்துள்ள நிலையில் சீனாவுடனான பொருளாதார மோதலை எதிர்க்கொள்வது என்பது எளிதான விடயமல்ல . கொரோனா வரைஸ் தொற்றின் ஊடாக சீனா தனது இருப்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளதே தவிர எவ்வகையிலும் சீன பொருளாதாரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்த வில்லை.

இந்த நிலையானது சீன பொருளாதார தந்திரோபாயத்தின் முக்கிய நிலையாகும் . ஏனெனில் உலகில் எந்தவொரு நாடும் ஏற்றுமதி குறித்து சிந்திக்கவே முடியாத நிலையில் சீனா வெற்றிகரமாக இன்று மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்கின்றது. இவ்வாறானதொரு வலுவானதொரு நிலையை இன்று அமெரிக்காவிடம் எதிர்பார்க்க முடியாதுள்ளது.

வைரஸ் ; தொற்று சவாலை எதிர்கொள்ள தயாராக இருந்தது போல் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குறுகிய காலத்திற்குள் மீண்டு தனது வர்த்தக நடவடிக்கைளை சீனா ஆரம்பித்து விட்டது. ஆனால் அமெரிக்காவால் இதனை சமாளிக்கவே ; முடியவில்லை.

லியோ நிரோஷ தர்ஷன்