ATFIA 2020 விருது நிகழ்வு விமர்சனம்

பங்குனி 15 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில் பிளாக்டவுனில் அமைந்திருக்கும் “போமன்” மண்டபத்தில் ஆஸ்திரேலிய தமிழ்த்திரை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக ATFIA 2020 விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் திரைத்துறை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக நடந்த முதல் நிகழ்வு இதுதான் எனலாம், ஆகவே இவ்விழாவை நிகழ்த்திய நண்பர் சிட்னி பிரசாத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

அரங்கை அடைந்து உள்நுழைந்தோம், சிவப்பு கம்பள வரவேற்பு, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளுடன் கலைஞர்களை கேள்விக்கணைகளுடன் வரவேற்றனர் குழுவினர். முடிந்து உள்நுழைந்தோம், மீண்டும் சிவப்பு கம்பளம், எம்மை வெண்ணிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேசை நாற்காலியில் அமரவைத்தனர். பொதுவாக, எம்மவர் நிகழ்வுகளில், நிகழ்ச்சியின் பெயர் அச்சடிக்கப்பட்ட பதாகை (Name Banner), மேடையின் பின் திரையில் தொங்கவிடப்பட்டிருக்கும், மேடையின் முன்புறம் இருபக்கமும் மின்விளக்கு கம்பங்கள் (Light Stands) மேடைக்கலைஞர்களை மறைத்தவாறு இருக்கும், அவ்வாறு இல்லாமல், புதிய தொழில்நுட்ப இலக்கமுறை திரையும் (Digital Screen), வண்ண வண்ண மின்விளக்குகளும், எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததோடு, எமது எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

சரியாக ஐந்து இருபது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது, ஆரம்பத்தில் பாதி நிரம்பி காட்சியளித்த மண்டபம், போகப்போக மீதியும் நிறைந்து, மண்டபம் நிறைந்த நிகழ்வாகவே அமைந்தது. மக்களுக்கு பரிச்சயமான இசைக்கலைஞர் சாரு ராமும், பல நாடக, நடன மேடைகளில் மக்களுக்கு அறிமுகமான சகோதரி நர்த்தனா பார்த்தீபனும் கலகலப்புடனும் நகைச்சுவையுடனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏறக்குறைய ஐம்பது திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது, இத்தனை உள்ளூர் திரைப்பட படைப்பாளிகளும் கலைஞர்களும் ஆஸ்திரேலியாவில் ஒன்றாக கூடிய முதல் நிகழ்வு இதுவரை இதுவே என்று கூறலாம். விருதுகளுக்கிடையில் உள்ளூர் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும், பாடகர்களின் அசத்தலான பாடல்களும் இடம்பெற்றன, கண்களுக்கும் செவிகளுக்கும் வர்ண, வண்ண சுவையாக அமைந்திருந்தது, கண்ணுக்கும் செவிக்கும் மட்டுமல்ல, நிகழ்ச்சி முடிவில், வாய்க்கும் வயிற்றுக்கும் கூட சுவையான உணவு உபசரிப்பு அருமை, அருமை. கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட விருது கோப்பையின் தரம், திரைத்துறை வளர்ந்த நாடுகளில் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் கோப்பைக்கு இணையாக உயர்ந்ததாக இருந்தது.

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாபெரும் கலைஞர் திரு. ஏ. ரகுநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது, அத்தருணம் திரு. ஏ. ரகுநாதன் அவர்கள் அனுப்பிவைத்த நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்த ஒளிநாடா ஒளிபரப்பப்பட்டு, சபையில் அனைவரும் எழுந்து நின்று கௌரவப்படுத்தியது மனதை தொடும் வண்ணம் இருந்தது. திரு. ஏ ரகுநாதன் அவர்கள், 2009 தில் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்து, நான் இயக்கிய, 2012 ல் திரையிடப்பட்ட, ஆஸ்திரேலிய முதல் தமிழ் திரைப்படமாகிய “இனியவளே காத்திருப்பேன் ” திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் 2018 ல் எனது இயக்கத்தில் உருவாகி வெளியான “சாட்சிகள் சொர்க்கத்தில்” படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அவருடைய பாகம் பிரான்ஸ் நாட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. ஏ. ரகுநாதன் அவர்கள் 1963 இல் இலங்கையில் உருவாக்கப்பட்டு வெளியான நான்காவது படமான “கடைமையின் எல்லை” எனும் திரைப்படத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார், இப்படத்தை திரு. வேதநாயகம் அவர்கள் இயக்கி இருந்தார், பின் 1968 இல் “நிர்மலா” எனும் திரைப்படத்தை தயாரித்தார். தொடர்ந்து 1978 இல் வெளியான, இலங்கையில் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான “தெய்வம் தந்த வீடு” எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 05.05.1935 இல் பிறந்து, 84 வயதை தொட்டிருக்கும் அவர், 57 வருடங்களுக்குமேல் திரைத்ததுறையில் பயணித்து வருகிறார், இதுவரை 25 துக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50 துக்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மாமனிதண் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே எமக்கு பெருமை, அதிலும் அவருடன் பயணித்திருக்கிறோம் என்றால் அது நிச்சயம் எமது பாக்கியமே. திரு. ஏ ரகுநாதன் ஐயா அவர்களின் விருதை பெற, என்னை மேடைக்கு அழைத்திருந்தனர், அதனை நான் எனது வாழ்நாள் பெருமையாக எண்ணுகிறேன்.

சில வருடங்களுக்கு முன்வரை திரைத்துறை அநேகமானோரின் கனவுலகமாகவே இருந்தது, இன்று தொழில்நுட்பம் திரையுலகை, உள்ளங்கையில் கொண்டுவந்திருந்தாலும், கலைநுட்ப நிலைமாற்றம், ரசிகர்களின் ரசனையின் உருமாற்றம் போன்றவை, வெற்றியை, எட்டித்தொடும் தொலைவிலன்றி, சற்று தொலைவிலேயே வைத்திருக்கின்றன எனலாம். உழைப்பு, அர்ப்பணிப்பு, உண்மை, இவையுள்ள நேர்த்தியான ஒரு குழுவின் தெளிவான படைப்புகளே வெற்றியை எட்டித்தொடும் படைப்புகளாக அமைகின்றது. “இனியவளே காத்திருப்பேன்” திரைப்படத்தை தொடர்ந்து, ஜூலியன், இளந்திரையன், N.S. தனா, மதிவாணன், தினேஷ் போன்றவர்கள் சில படைப்புகளை படைத்து திரைக்கு கொண்டுவந்தனர், மெல்ல மெல்ல திரைக்கலைஞர்கள் உருவாகினர். இதற்கிடையில் நான் இயக்கிய ஐந்து குறுந்திரைப்படங்கள் சர்வதேச விருதுகள் பெற்றன.

என்னைப்போன்ற அனைத்துக்கலைஞர்களுக்கும் ATFIA விருது அங்கீகாரத்தையும் உற்சாகத்தையும் தந்தது என்றால் மிகையாகாது. தமிழர்களை ஒன்றிணைப்போம், தமிழ் கலை கலாச்சாரத்தை வளர்ப்போம் என்ற போர்வையில், மக்களிடையே பிரிவினைகளை விதைத்து, அவரவர் வளர்ச்சிக்காக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் பல குழுக்களுக்கு வராத ஒரு சிந்தனை நண்பர் சிட்னி பிரசாத் அவர்களுக்கு தோன்றியது நிச்சயம் பாராட்டுக்குரியது. வெளிநாட்டுக் கலைஞர்களுக்கு ஆயிரம் ஆயிரமாக செலவுசெய்ய தயாராக இருக்கும் பலர், உள்ளூர் கலைஞர்கள், கலைமூலம் பொருள் சேர்த்து, கலையை ஒரு துறையாக அமைக்க உதவாமல், சமூகத்தொண்டு என்ற பெயரில், பணம் சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, கலைஞர்களின் கலைத்துறை வளர்ச்சிக்கு தடையாக நிகழ்த்தப்படும் பல நிகழ்வுகள் மத்தியில், கலைஞர்கள் பெருகுவதற்கும், கலைத்துறை வளர்வதற்கும் வழிவகுக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக அமைந்தது என்பது உண்மை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், விருதுகளும் கலைஞர்களை ஊக்குவித்து மேலும் மேலும் வளர தூண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிகழ்வு மட்டுமல்ல இதுபோன்ற பல நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும், மேலும் திறன்பட சிறப்பாக அமையவேண்டும் என்பதே என்னைபோன்றவர்களின் பிரியம், அது, கலையை ஒரு துறையாக அமைக்க ஊக்குவிப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும். அப்படி எதிர்காலத்தில் அமையும் நிகழ்வுகள் மேலும் சிறப்பாக அமைய ஒருசில விடயங்களில் கவனம் செலுத்தவும் தேவைப்பட்டால் மாற்றங்களும் அவசியம் என்பது எனது கருத்து மட்டுமல்ல, பல கலைஞர்களின் கருத்தும் கூட. அவை குற்றாச்சாட்டுகள் அல்ல, நிகழ்வுகளின் தரம் மேன்படவேண்டுமென்ற தாகம்.

ஒலி அமைப்பு பொறுப்பாளராக இருந்த திரு. பப்பு அவர்கள் காலகாலமாக நம்மவர் நம்பிக்கைக்குரிய சிறந்த ஒலி அமைப்பு வல்லுநர், அவரிடம் எமக்கு அதிக எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உள்ளது. இந்நிகழ்வில் ஒலிபெருக்கி ஒத்திகை முறைப்படி நடைபெறவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது, குறிப்பாக நிகழ்ச்சி ஆரம்பத்தில் தொகுப்பாளர் நண்பர் சாருராம் பேசிய வார்த்தைகளை பார்வையாளர்களால் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை, தொடர்ந்தும் கூட, சில பாடகர்கள் பாடும்போது, இசைக்கும் குரலுக்கும் இடையிலான சமநிலை சரிபட அமையவில்லை, இதற்கு ஒலிபெருக்கி கருவிகளின் ஆழ சக்தி (Depth,Power) குறைவாக இருந்ததோ என்று தோன்றியது.
மக்கள் இல்லாத மண்டபத்தில் ஒலி சமநிலை (Sound Balance ) செய்து ஒத்திகை பார்க்கும் போது இருக்கும் தரத்திற்கும், ஆழ சக்திக்கும், மக்கள் நிறைந்த மண்டபத்தில் ஒலிக்கும் தரத்திற்கும் பெரும் வேறுபாடு இருக்கும், இதனை, ஒலி அமைப்பு வல்லுனர்களும், கலைஞர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து ஒத்திகை பார்த்து திட்டமிட்டிருந்தால், நிகழ்ச்சி மேலும் பூரணமடைந்திருக்கும்.

நண்பர் சாருராம் ஒரு தலைசிறந்த கலைஞன், பல மேடைகள் பார்த்தவர், இசை, நடிப்பு தொழில்நுட்பம் அனைத்திலும் தேர்ந்தவர், அவரிடம் எப்பொழுதும் மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும், அவருடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சகோதரி நர்த்தனா பார்த்தீபன் அவர்களும், சிறந்த, அனுபவமுள்ள, அனைவருக்கும் அறிமுகமான ஒரு கலைஞர். இவர்களின் உரையாடலில் எதார்த்தமாக உரைநடையை கையாண்டாலும், உரிய இடங்களில், உற்சாகமாகவும் உரத்த குரலிலும் அறுத்துறுத்து தெளிவாக சத்தமாக பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். விருது பெற்ற கலைஞர்களைபற்றிய தகவல்களை அவர்கள் சேகரிக்கைவில்லை அல்லது வழங்கப்படவில்லை போன்ற ஒரு பிம்பம் தோன்றியது, தகுந்த தகவல்களுடன் மேலும் ஒத்திகையும் பயிற்சியும் எடுத்திருந்தால், நிகழ்ச்சியின் குறிக்கோள் நேர்த்தியாக இருந்திருக்கும். பார்வையாளர்களுக்கு இன்னுமொரு பாடசாலை ஆண்டு விழா பார்க்கும் அனுபவம் சிறிது இருந்தது வருந்தத்தக்கது.

கலைஞர்களுக்கே சமர்ப்பணமாக நடைபெற்ற இந்நிகழ்வில், விருதுவழங்கும் முக்கிய பிரமுகர்களைப்பற்றிய தகவல்கள் கூறப்பட்ட அளவுக்கு விருதுபெறும் கலைஞர்கள் பற்றிய முக்கிய குறிப்புகளோ அவர்களின் கலைப்பயணம் பற்றிய தகுந்த தகவல்களோ கூறப்படவில்லை. விருது பெற்ற கலைஞர்கள் அனைவரையும் அவரவர் கலைப்பயண அனுபவங்களில் இருந்து ஒருசில வரிகளாவது கூறுவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம், அதற்காக கலை நிகழ்ச்சிகளை சுருக்கி இருக்கலாம். கலை நிகழ்வுகள் இந்நிகழ்ச்சியின் பிரதான குறியல்ல. பல தகவல்களை மேடையில் மக்கள்முன் பகிர தங்களை தயார்படுத்திக்கொண்டு, எதிர்பார்ப்புடன் வந்த பல கலைஞர்களுக்கு, சாதாரண ஒரு கலைவிழாவில் பரிசு பெற்று சென்றதுபோல், ஒருவிதத்தில் ஏமாற்றமாகவும் கௌரவக்குறைவாகவும் காணப்பட்ட்து. என்னதான் நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், விருது வாங்கும் கலைஞர்கள் மேடையில், நிகழ்வுக்கு வந்தவர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்படுவதுதான் அழகும், பெருமையும், இதில் எந்த மாற்றுக்கருத்தும் கூறமுடியாது.

பரிசு வழங்கிய பிரமுகர்களைக்கூட, கலைத்துறையில் பயணித்த, பயணிக்கும் கலைஞர்களையும் இணைத்து அழைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று பரிசு பெற்ற கலைஞர்கள் கூறியது எம் செவிகளை வந்தடைந்தது. பல விருதுகள் அறிவிக்கப்பட்டும், பரிசுபெறும் கலைஞர்கள் பரிசினை பெற்றுக்கொள்ள மேடைக்கு வரவில்லை, அநேகமாக அவர்கள் விழாவுக்கே வரவில்லை என்றுதான் எண்ணுகிறேன், ஒரு சில நபர்களால் இத்தனை பொறுப்புகளையும் கையாள்வது சாத்தியமற்றது, கலைப்பயணத்தில் தங்களை அர்ப்பணிக்க, ஆர்வமுடன் பலர் காத்திருக்கிறார்கள், பரிசுபெறும் கலைஞர்களை நாடி, முன்வரிசையில் அமரவைத்து அழைத்தவுடன் மேடைக்கு செல்ல வரிசைப்படுத்தும் பணியை ஒரு குழுவினர் கையான்டிருந்தால் இதுபோன்ற சங்கடங்களை தவிர்த்திருக்கலாம்.

இதுவரை ஆஸ்திரேலியாவில் ஆறு இயக்குனர்களின் ஒன்பது படங்களே திரைக்கு வந்திருக்கின்றது, அவர்களுக்கு விருது வழங்கும் போது அவரவர் படைப்புகளில் இருந்து சில காட்சிகளை முக்கியத்துவப்படுத்தி ஒளி, ஒலியோடு பார்வையாளர்களுக்கு திரையிட்டு காண்பித்திருந்தால் அவர்களைப்பற்றியும் அவர்களின் படைப்பு பற்றியும் தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும். இது போன்ற நிகழ்வுகளில் தகவல்கள் அவசியம், அது கலைஞர்களுக்கும் பெருமை, மக்களுக்கும் தகவல்களை பெற ஒரு வாய்ப்பாக அமையும். விருது பெற்றவர்களின் பட்டியல் வரிசையில் மாற்றம் இருந்திருக்க வேண்டும், பொதுவாக முக்கிய கலைஞர்களுக்கு இறுதியாகவே விருது வழங்கப்படும், இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன, அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

நடனக்குழு கலைஞர்கள் சிறப்பாக நடனம் புரிந்தனர், அவுஸ்திரேலியாவில், வேலை நெருக்கடிக்கு மத்தியில் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஒருங்கிணைத்து பயிற்சியளித்து ஒத்திகைபார்த்து மேடையேத்துவது என்பது கடினமே, கலைஞர்களையும், பயிற்சித்தவர்களையும் மனமார பாராட்டுகின்றேன், நிகழ்ச்சி எண்ணிக்கையை குறைத்து ஒத்திகையை அதிகரித்து இருந்தால், மேலும் மிருதுவாகவும் (crisp) சுவையாகவும் இருந்திருக்கும், ஒருசில நடனங்களில், ஒருசில கலைஞர்களுக்கு மேலும் பயிற்சியும், ஒத்திகையும், கவனமும் இருந்திருக்கலாம் என தோன்றியது. திரைப்படத்துறை ஒரு மாபெரும் துறை, அத்துறை சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு கலை நிகழ்ச்சிகள் எந்தவித குறைபாடுகளும் கூறமுடியாத அளவுக்கு சிறப்பாக அமைய, அமைக்க முயற்சிக்க வேண்டும். அல்லது மேல்கூறியதுபோல் இன்னுமொரு கலைவிழாவாகத்தான் அமையும். தரமாக ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வு இதுபோன்ற ஒருசில காரணங்களால் இன்னுமொரு இரவு போசன நிகழ்வுபோன்ற எண்ணம் சிறிது தோன்றியது நிதர்சனம். மேல்கூறிய ஒருசில சிறு குறைபாடுகளை கழித்துவிட்டு பார்த்தால், இந்நிகழ்வு சிறப்பாகவே இருந்தது. இக்காலகட்டத்தில் எம்மவர்களுக்கு அவசியமான ஒரு நிகழ்வும் கூட. எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற செயல்பாடுகளில் கவனம்செலுத்தி இந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் திறன்பட பல சாதனைகள் படைக்கவேண்டும் என்பதுதான் எம் அனைவரினதும் அவா.

மேலுள்ள வரிகள் எனது பார்வையின் பிரதிபலிப்பாக என்மனதில் தோன்றியவை, மற்றும் பரிசுபெற்ற கலைஞர்கள், பார்வையாளர்கள் என்னிடம் கூறியவை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சிகளை மழுங்கடிக்கும் நோக்குடன் இந்த விமர்சனம் எழுதப்படவில்லை, எதிர்வரும் காலங்களில் அவர்கள் அதிக கவனம் எடுத்து, ஒரு குழுவை அமைத்து, இணைந்து, பொறுப்புகளை பகிந்து, நிகழ்வுகளை சிறப்புற செய்யவேண்டும் என்ற அக்கறையுடனும் பொறுப்புடனும் எழுதப்பட்டவை. இதில் சரி பிழை என்பது அவரவர் கருத்து, எதுவாக இருப்பினும் அவற்றையும் பணிவோடு மதிக்கிறேன்.

வளர்ச்சிப்பாதையை நோக்கிப் பயணிப்போம்! நம்மை வளர்த்துக்கொள்வோம்!
உடன் பயணிப்பவர்களுக்கு கைகொடுப்போம்! உதவுவோம்! உற்சாகம் செய்வோம்!
உறுதுணையாய் இருப்போம்!

தாயை போற்றுவோம்! தாய் மண்ணை பேணுவோம்! தாய்மொழியில் பேசுவோம்!

ஈழன் இளங்கோ