கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளது. மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். வைரசை அழிக்க இந்த நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல.
கொரோனா வைரசை ஒழிக்க இந்த நேரத்தை பயன்படுத்த அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு பரிசோதிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் வருகிறது என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal