இலங்கையில் கொரோனா.! எத்தனை பேர் பாதிப்பு..! – ஒரு கண்ணோட்டம்

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19 வைரஸ்)தொற்றால், பாதிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலையாகும் போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களுடன் இந்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்ததாகவும், அதில் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 99 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறும் தொற்றாளர்கள் 99 பேரில் இரு வைத்தியர்கள் உள்ளடங்கின்றமை இங்கு விஷேட அம்சமாகும். இதில் ஒரு வைத்தியர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிப்பவர் எனவும், அவர் உட்பட இரு வைத்தியர்களுக்கும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று சந்தேகம் தொடர்பில் சிகிச்சையளிக்க 30 வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் 19 வைத்தியசாலைகளில் 229 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதில் அதிகமானோர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலேயே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு இரு வெளிநாட்டவர்கள் உட்பட 97 பேர் தற்போது கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சைப் பெறுகின்றனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கவென மாற்றியமைக்கப்பட்ட வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 27 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 101 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 33 பேர் மட்டுமே தனிமைப்படுத்தல் மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் அனைவரும் அவ்வாறான மையங்களுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையானது ஆபத்தானது என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காடுகின்றனர்.

தன்படி மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்துக்கு மேலதிகமாக, புத்தளம், இரத்தினபுரி, குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ், மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது குழுவினர் நேற்று இறுதி மருத்துவ பரிசோதனை அறிக்கையின் பின்னர் அங்கிருந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இரானுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா கூறினார். 311 பேர் இவ்வாறு கண்காணிப்பின் பின்னர் அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று உலகளாவிய தீவிரமாக பரவ ஆரம்பித்த பின்னர் இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பியவர்களாவர்களே இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னர் அவர்களுக்கு அந்த தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இவ்வாறு அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு புனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 203 பேரும், கந்தக்காடு நிலையத்திலிருந்து 108 பேரும் கண்காணிப்பின் பின்னர் இவ்வாறு சான்றிதழ் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நிலையங்களிலிருந்து அனுப்பப்பட்டவர்களை கண்டி, மாத்தறை மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இலங்கை இராணுவத்தினர் விசேட பஸ்களில் அழைத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.