அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி

அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், ரபடா, இம்ரான் தாஹிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அவுஸ்ரேலிய அணி 36.4 ஓவர்களில் 167 ரன்களில் சுருண்டது. மிட்செல் மார்ஷ் (50 ரன்), மேத்யூ வேட் (52 ரன்), டிரைமைன் (23 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (21 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கை தாண்டவில்லை. 6 பேர் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கைல் அப்போட் 4 விக்கெட்டுகளும், ஷம்சி 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

தொடர்ந்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி இந்த எளிய இலக்கை 35.3 ஓவர்களில் எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பொறுப்பு கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 69 ரன்களும், ரோசவ் 33 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் கப்டவுனில் நாளை  நடக்கிறது.