திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானார்!

திமுக பொதுச்செயலாளரும், முதுபெரும் திராவிட இயக்கத்தலைவரும், பேராசிரியர் என அழைக்கப்பட்ட க.அன்பழகன் காலமானார்.

திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார். கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் நேற்றிரவு அவரை திமுக தலைவர் கடைசியாக பார்த்துவிட்டுச் சென்றார். அப்போது அவர் அன்பழகனின் உடல் நிலை மருத்துவ சிகிச்சையை ஏற்கும் நிலையில் இல்லை என்று கவலையுடன் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

இந்நிலையில் இன்றிரவு 1.00 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது இறப்புச் செய்தி அறிந்து திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினர்.

98 வயதாகும் அன்பழகன் 1922-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் பிறந்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான நண்பராக விளங்கிய அன்பழகன் கருணாநிதி இறக்கும்வரை அவரது உற்ற தோழராக, பொதுச்செயலாளராக விளங்கினார்.

அன்பழகன் மறைவை அடுத்து அவரது உடல் அப்போலோ மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவை அடுத்து திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது.