“நான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதில்லை”!

“நான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதில்லை,” என ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த குர்து அகதியான பெஹ்ரூஸ் பூச்சானி ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பூச்சானி ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்து வந்த நிலையில் பூச்சானியின் தற்போதைய கருத்து பதிலடியாக கருதப்படுகின்றது.

முன்னதாக, நியூசிலாந்துக்கு வரும் தனிநபர் குறித்து தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார் நியூ சிலாந்து பிரதமர். அதனால் அது அவர் மற்றும் அவர்களின் குடியேற்றத்துறை அமைச்சரின் பிரச்னை. இதற்கு நான் கருத்து தெரிவிக்க வேண்டிய தேவையில்லை,” எனக் கூறிய பீட்டர் டட்டனிம் நியூசிலாந்தில் அகதி பூச்சானிக்கு தஞ்சம் வழங்கப்பட்டால் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

“அவர்(பூச்சானி) ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார். அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்,” என முன்பு தெரிவித்திருந்தார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.

“டட்டனின் என்ன பேசினார் என்று நான் கேட்கவில்லை. ஆனால், நான் ஆஸ்திரேலியா செல்ல விரும்புவதாக ஒருபோதும் சொன்னதில்லை,” எனக் கூறியுள்ளார் பூச்சானி. எங்களை போக விடுங்கள் என்று தான் கேட்டோம் அது ஆஸ்திரேலியாவுக்குள் போக விடுங்கள் என்று அர்த்தமாகாது என்ற விதத்தில் தனது கருத்து குர்து அகதி பூச்சானி பதிவு செய்துள்ளார்.

பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை No Friend But The Mountains என்ற நூலாக எழுதியுள்ளார் அகதி பூச்சானி. இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நியூசிலாந்தில் நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்ற பூச்சானி மீண்டும் மனுஸ்தீவுக்கு இனி திரும்பப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் நியூசிலாந்தில் தஞ்சம் கோருவதாகக் கூறப்பட்டது.

ஆனால, நியூசிலாந்தில் தஞ்சம் கோருவது தொடர்பான எந்த கருத்தையும் பூச்சானி இதுவரை தெரிவிக்கவில்லை. ‘தனிநபர் சுதந்திரம் மற்றும் சட்ட காரணங்களை’ சுட்டிக்காட்டி பூச்சானியின் விசா நிலைக் குறித்து கருத்து தெரிவிக்க நியூசிலாந்து குடிவரவுத்துறை மறுத்துள்ளது.