‘அதிகாரப் பரவலாக்கலானது முழு நாட்டுக்கும் அமுலாக வேண்டும்’!

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பின்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

தீர்வுத்திட்டம் தொடர்பில் பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பரவலாக்கலானது முழு நாட்டிற்கும் அமுலாக வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் இதன் போது  வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தால் சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இதன்போது இரா சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸ்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடானது மிகவும் ஆக்கப்பூர்வமான ஒன்றென குறிப்பிட்டுள்ளார்.

நியாயமாக தீர்வினை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கத்துடன் இரணந்து செயற்பட பிரித்தானியா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.