யார் இந்த புதுக்கதையை எழுதியவர்?

யார் இந்த புதுக்கதையை எழுதியவர்? என்று தன்னைப் பற்றிப் பரவிய வதந்திக்கு நடிகர் ஆர்த்தி கிண்டல் செய்துள்ளார்.

‘மாஸ்டர்’ படத்திலிருந்து விஜய் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியதிலிருந்தே, வருமான வரி சோதனை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்தச் சோதனை ‘பிகில்’ படத்தின் செலவுகள், சம்பளம், வசூல் உள்ளிட்டவைக்காக நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சிலர் சமூக வலைதளத்தில் இந்தச் சோதனை என்பது கிறிஸ்தவக் குழுக்கள் விஜய் மூலமாக தமிழகத்தில் காலூன்ற நினைப்பதால் நடத்தப்பட்டது என்று செய்திகளை வெளியிட்டார்கள். மேலும், அது தொடர்பான பணப் பரிவர்த்தனைக்காகவும். திரையுலகில் விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்தச் செய்தியில் ஆர்த்தியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தனது பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து ஆர்த்தி, “யார் இந்த புதுக் கதையை எழுதியவர்? வாரே வா… மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு. கிருஷ்ணா இந்த பெயரிடத் தைரியமில்லாத புளுகனை காப்பாத்துப்பா” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் விஜய் வெளியிட்ட செல்ஃபி தொடர்பாக ஆர்த்தி, “ஆமாம் குவித்திருக்கிறேன். தாய்மார்களின் அன்பையும் சகோதரர்கள் ஆதரவையும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தையும். ஆமாம் கணக்கில்லாமல் சேர்த்திருக்கிறேன் ரசிகர்களின் உள்ளங்களை. கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. வேணும்னா பாத்துக்கோங்க…” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருப்பது நினைவு கூரத்தக்கது.