துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 18 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்!

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 18 பேர் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில் , ”துருக்கியில் எலாஜிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரைஸ் நகரில் வெள்ளிக்கிழமையன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 15 கிலோ மீட்டர் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்குப் பின் 35 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக துருக்கி பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் சரிந்துள்ளன. மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்திற்கு இதுவரை 18 பேர் பலியாகி இருப்பதாகவும், 500க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 17,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.