எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை!

பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற 10 பெண் பிரபலங்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்திய தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற 10 பெண் பிரபலங்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து பாரத ரத்னா விருது பெற்ற பிரபல கர்நாடக இசைப்பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஹன்சா மேத்தா (கல்வி), கமலா சொஹோனீ (அறிவியல்), ஆனந்தி பாய் கோபால்ராவ் ஜோஷி (மருத்துவம்), தேவி அகில்யாபாய் ஹோல்கார் (நிர்வாகம்), மகாதேவி வர்மா (இலக்கியம்), ராணி கெய்டின்லியு (சுதந்திர போராட்டம்), அம்ரிதா தேவி (வன விலங்கு பாதுகாப்பு), லீலாவதி (கணிதம்), லால் டெட் (கவிதை) ஆகியோரின் பெயர்களாலும் பல்கலைக்கழகங்களில் இருக்கை உருவாக்கப்படும்.

ஒவ்வொரு இருக்கைக்கும் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவிடப்படும். இந்த இருக்கைகள் 5 ஆண்டுகளுக்கு இருக்கும். சம்பந்தப்பட்ட துறைகளில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்கு இந்த இருக்கைகள் உதவும்.