இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.!

2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம்.

இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது.

அதாவது  விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனவே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன.

எனினும் குறித்த கட்சிகளில்  ஈழமக்கள் புரட்சிகள விடுதலை முன்னணிக்கு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளது.  அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான அனுமதியை  வழங்கியப் பின்னரே  புதிய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். குறித்த  கூட்டணிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணமாகும். மேலும்  2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.