மீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.
அதை வைத்து படங்கள் இல்லாமல் வீட்டில் நான் சும்மா இருப்பதாக சிலர் பேசி இருக்கலாம். மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.
தமன்னா
பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும். மீ டூவில் புகார் சொன்னவர்களுக்கு பட வாய்ப்புகள் வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை. சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவேன். எண்ணெய் உணவுகளை தள்ளிவைக்க வேண்டும். 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.