பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால், அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், அதிருப்தி தெரிவித்தனர்.
ராஜீவை கொல்ல பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு குறித்து சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் எந்த புதிய விஷயமும் இடம்பெறவில்லை என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.