திருமணம் நடைபெற்ற தருணம் பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்த காட்சி!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள மிகவும் ஆக்ரோசமாக குமுறக்கூடிய எரிமலைகளில் டால் எரிமலையும் ஒன்றாகும்.

குறித்த எரிமலை நேற்றையதினம் குமுறிய நிலையில் ஒரு கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் பலத்த சத்தத்துடனும், அதிர்வுகளுடனும் வெடித்து சிதறிவருகிறது.

குறித்த எரிமலை வெடித்துக் குமுறிய இடத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்நிலையில் அவர்களின் மணவறைக்கு பின்புறமாக குறித்த எரிமலை வெடித்துக் குமுறும் போது வானளவு உயரத்திற்கு சாம்பலுடன் வெளியேறிய புகைமண்டல காட்சியை திருமண ஜோடியுடன் இணைத்து திருமணத்தின் ;புகைப்படக் கலைஞர் புகைப்படமாக்கியுள்ளனர்.

குறிப்பாக எரிமலையில் இருந்து சாம்பலும், கொதிநீரும் ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு வானை நோக்கி வீசப்பட்டு வருகிறது. இதனால் மலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சுமார் 8 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு திணைக்களம், ; இது அபாயகரமான வெடிப்பாக மாறலாம் இது நிலநடுக்கத்துக்கு வழிவகுக்கலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மணிலா விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், சுமார் 170 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதிக்கு ;இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸின் முக்கிய சுற்றுலா தளமான மேயன் எரிமலை வெடித்ததால் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். பிலிப்பைன்ஸில் 24 எரிமலைகள் உள்ளன.

இதில் தற்போது வெடித்து வரும் டால் எரிமலை இரண்டாவது மிகப் பெரியது என்று கருதப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், நியூசிலாந்து எரிமலை தீவு எதிர்பாராதவிதமாக வெடித்ததில் 19 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.