ஈரான் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்கா!

ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ராக்கெட் தாக்குதலில், ஈரான் நாட்டின் ராணுவ தளபதி மற்றும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவின் முக்கிய தளபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
எண்ணெய் வளம் மிக்க ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா கூறியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. 63.84 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய், 69.16 டாலர்களாக அதிகரித்தது. மத்திய கிழக்கு பகுதியில் மோதல் உருவாகும் என முதலீட்டாளர்கள் அச்சமடைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதேபோல் தங்கம் விலையும் கணிசமாக உயர்ந்தது. தங்கம் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கும் இந்தியாவில் தங்கம் விலை இன்று சவரன் 30 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 அதிகரித்து, ரூ.30,344-ஐ  எட்டி புதிய உச்சத்தை தொட்டது.