ஊடகவியலாளரை கைதுசெய்ய முயற்சி !

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு  அவரை கைதுசெய்ய இரவில் சென்ற காவல் துறை அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

நேற்று  இரவு 9.10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர  ஊடகவியலாளருமாகிய   செல்வக்குமார் நிலாந்தன் வீட்டிற்கு சிவில் உடையில் சென்ற ஏறாவூர் காவல் துறை அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டாரை அச்சுறுத்திய தோடு  ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தனை நாளை காலை 9 மணிக்கு ஏறாவூர் காவல் துறை நிலையத்திற்கு  வருமாறு குடும்பத்தாரை அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

இரவு வேளையில் சிவில் உடையில்காவல் துறை சென்றதால் ஊடகவியலாளரின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஊடகவியலாளர் நிலாந்தனை காவல் துறையினர்  ஏன் கைது செய்ய முயற்சி செய்கின்றனர் என்பது குறித்து எந்த தகவலையும் குடும்பத்தினரிடம் காவல் துறை  கூற மறுத்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காவல் துறையால்  ஊடகவியலாளருக்கு அழைப்பு கடிதமோ அல்லது நீதிமன்ற அழைப்பாணையோ வழங்கப்படாத நிலையில் எதன் அடிப்படையில் ஊடகவியலாளரை கைது செய்ய ஏறாவூர் காவல் துறை முயற்சி செய்து வருகின்றனர் என்பது தனக்கு தெரியாது என ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.