ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; தந்தையின் துணிச்சலுக்காக மகனுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிப்பு!

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 18 மாதம் நிரம்பிய மகனுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஜெஃப்ரி கிட்டன் என்ற 32 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் கிட்டனின் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் கிட்டனின் ஒன்றரை வயது மகன் ஹார்வே கிட்டனுக்கு உயரிய கெளரவ பதக்கம் அணிவித்து அவுஸ்திரேலிய தீயணைப்பு பிரிவினர் பெருமைப்படுத்தியது.

தனது தந்தையின் இழப்பை அறியாத, ஹார்வே கிட்டன் தீயணைப்புத் துறை தலைமை அதிகாரியிடமிருந்து பதக்கத்தைப் பெற்ற காட்சி இறுதிச் சடங்கில் இருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது. இச் சடங்கில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 பேர் காணாமல்போயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.