போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கிய இன்ஸ்டாகிராம்!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள துவங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி இருக்கிறது. போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது போலி செய்தி என குறிப்பிட துவங்கியுள்ளது.
போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து புதிய நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது. புதிய கூட்டணியின் மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகளை குழுக்கள் மேற்கொள்கின்றன.
இதேபோன்ற அம்சம் ஃபேஸ்புக் தளத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் செயலியும் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் எனும் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் புதிய அம்சம்
இத்துடன் தவறான தகவலை அணுக வாடிக்கையாளர்களுக்கு ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கும் “See Why” எனும் அம்சமும், பதிவினை பார்க்க வழி செய்யும் “See Post” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட தகவலை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் இயக்க வழி செய்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு அம்சங்களில் முதலாவது அம்சம் கொண்டு ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் தவறான தகவல் பற்றி அதிக விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.