ஆஸ்திரேலிய காட்டுத் தீ: வனவிலங்குகளைக் காப்பாற்றிய ஊழியர்கள்!

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதற்கிடையில் வனவிலங்கு சரணாலாயம் ஒன்றிலிருந்து 200க்கும் அதிகமான வனவிலங்குகளை ஊழியர்கள் காப்பாற்றினர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

காட்டுத் தீ காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தளங்களும், வனவிலங்கு சரணலாயங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின.

இந்த நிலையில் காட்டுத் தீயின் பாதிப்பிலிருந்து பிரபல மோகோ உயிரியல் பூங்காவில் பல அரியவகை காண்டாமிருகம், வரிக்குதிரை, ஒட்டகச் சிவிங்கி என 200க்கும் அதிகமான உயிரினங்களை அங்குள்ள ஊழியர்கள் காப்பாற்றினர்.

நியூஸ் சவுத் வேல்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று முன்னரே எச்சரிக்கப்பட்டது. மக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் மோகோ வனவிலங்கு சரணாலாய ஊழியர்கள் வனவிலங்குகளுக்காக அங்கேயே தங்கிவிட்டனர்.

வனவிலங்குகளைக் காப்பாற்றிய ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.