திசை திருப்பப்படும் பிரச்சினைகள்!

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், முளைத்துக் கொண்டிருக்கும் ஒவ்­வொரு பிரச்­சி­னை­யையும் மறைக்க இன்­னொரு புதிய பிரச்சினைகள் உரு­வாக்­கப்­பட்டு வருகின்­றன. சுருங்கச் சொல்லின், பெரிய கோடு – சிறிய கோடு தத்­துவம் தான்.

ஒரு விவ­கா­ரத்தின் மீது குவி­கின்ற மக்­களின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்கு,  இன்­னொரு விவ­கா­ரத்தின் மீது அதிக கவ­னத்தைக் குவிக்க வேண்டும். அது மக்­களின் கோபத்­தி­லி­ருந்து அர­சாங்­கத்தைக் காப்­பாற்றும்.
புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த­வுடன், சில அத்­தி­யா­வ­சியப் பொருட்களின் வரி­களைக் குறைத்தும், விலை­களைக் குறைத்தும், மக்­களின் அபிமானத்தை வெல்ல முயன்­றது.

ஆனாலும், அதையும் மீறி வெள்ளை வேன் குற்­றச்­சாட்­டு­களும், பீதியும் மக்கள் மத்­தியில் அதிக கவ­னத்தை பெறத் தொடங்­கின.

அதற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­தது, சுவிஸ் தூத­ர­கத்தில் விசா உத­வி­யா­ள­ராக பணி­யாற்றும் பெண் அதி­காரி கார்­னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்ட குற்­றச்­சாட்டு தான்.

அந்தக் குற்­றச்­சாட்டு பொய் என்று நிரூ­பிப்­ப­தற்கும், அர­சாங்­கத்­துக்கு எதி­ரான சதித்­திட்டம் என்று நிரூ­பிப்­ப­தற்கும் எல்லாவித­மான முயற்­சி­களும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விவ­கா­ரத்­தினால் சுவிஸ் அர­சாங்­கத்­துக்கும் இலங்­கைக்கும் இடையில் கடு­மை­யான இழு­பறி நிலைகள் தோன்­றி­யி­ருந்­தன. எனினும், கடந்த ஒரு வாரத்­துக்கு மேலாக இந்த விவ­காரம் குறித்த செய்­திகள் ஊட­கங்­களில் அடங்கிப் போயிருக்­கின்­றன.

அர­சாங்கத் தரப்பில் இருந்தும் சரி, சுவிஸ் தரப்பில் இருந்தும் சரி, அதி­க­மாக எந்தச் செய்­தி­களும் வெளி­யா­க­வில்லை.

சுவிஸ் அர­சாங்கம் சிறப்புப் பிர­தி­நிதி ஒரு­வரை கொழும்­புக்கு அனுப்பி வைத்­ததை அடுத்து, இரண்டு தரப்புகளும் இந்த விவ­கா­ரத்தை அடக்கி வாசிக்க தீர்­மா­னித்­துள்­ளன போலும்.
ஏனென்றால், இந்த விவ­கா­ரத்­தினால் இரு­த­ரப்பு உற­வு­களும் சீர்­கு­லையும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்­தன.

இந்த விவ­கா­ரத்தில் இருந்து மக்களின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்கு, சம்­பிக்க ரண­வக்­கவின் கைது அர­சாங்­கத்­துக்கு ஒரு வாய்ப்­பாக அமைந்­தது.

அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டதையடுத்து, பர­ப­ரப்­பான சூழல் காணப்­பட்­டது. அவர் விடு­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து ராஜித சேனாரத்னவை கைது செய்­வ­தற்­கான நகர்­வுகள் தொடங்­கப்­பட்­டன.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் நடந்த வெள்ளை வேன் கடத்­தல்கள் குறித்து வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றைக் காரணம் காட்டி, கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்­டன.

இதனால் ராஜித சேனா­ரத்­னவின் பக்கம் மக்­களின் கவனம் திரும்­பி­யி­ருந்த சூழலில் தான், நாசூக்­காக அர­சாங்கம் ஒரு முடிவை எடுத்திருக்கி­றது, அடுத்த ஆண்டு பெப்­ர­வரி 4ஆம் திகதி சுதந்­திர சதுக்­கத்தில் நடத்­தப்­ப­ட­வுள்ள சுதந்­திர தின விழாவின் போது, தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்றும், சிங்­க­ளத்தில் மட்டும் தான் பாடப்­படும் என்றும் முடிவெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதை­ய­டுத்து, மீண்டும் தேசிய கீத விவ­காரம் பல­ரதும் கவ­னத்தை ஈர்க்கத் தொடங்கி அதனை ஒட்­டிய விவா­தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

2015 ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன-–ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட்டு அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், 2016 ஆம் ஆண்டிலிருந்து, தமிழ் மொழி­யிலும் சுதந்­திர தின விழாக்­களின் போது தேசிய கீதம் இசைக்­கப்­பட்டு வந்­தது.

அந்த முடிவை திடீ­ரென  இரத்து செய்யும் முடிவு அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதற்கு அமைச்சர் ஜனக பண்­டார தென்னக்கோன் கூறி­யி­ருக்­கின்ற காரணமும் தவ­றா­னது.
இந்­தி­யாவில் பல மொழிகள் இருந்­தாலும், ஹிந்­தியில் தான் தேசிய கீதம் பாடப்­ப­டு­கி­றது என்று அவர் கூறி­யி­ருக்­கிறார். அவ­ரது அந்த தகவல் முற்றிலும் தவ­றா­னது.

இந்­தி­யாவின் தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால், வங்­க­மொ­ழி­யி­லேயே (பெங்­காலி) எழு­தப்­பட்­டது. இன்னமும் வங்க மொழியில் தான் அது பாடப்­பட்டும் வரு­கி­றது.

பெரும்­பான்­மை­யி­ன­ராக ஹிந்தி மொழி பேசு­கின்ற மக்கள் இருந்­தாலும், சிறு­பான்மை மொழி­யான வங்க மொழியில் எழு­தப்­பட்ட தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றது இந்தியா.
இந்­தி­யாவில் நூற்­றுக்­க­ணக்­கான மொழிகள் பேசப்­படும் நிலையில், அங்கு ஒவ்­வொரு மொழி­யிலும் தேசிய கீதத்தை பாட முடி­யாத நிலை இருக்­கலாம். ஆனால் இலங்­கையில் தமிழும், சிங்­க­ளமும் தான் பெரும்­பா­லான மக்களின் தாய் மொழி­யாக உள்­ளன.

எனவே, தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்­பதை அனு­ம­திப்­பதால் ஒன்றும் கெட்டு விடப்­போ­வ­தில்லை. அதனால் நாட்டின் பாது­காப்­புக்கோ, இறை­மைக்கோ ஆபத்து வந்து விடாது. ஆனாலும் இன­வாதம் அதனைத் தடுக்கிறது.

தேசிய கீத விவ­கா­ரத்தில் இந்­தி­யாவை துணைக்கு அழைத்துக் கொள்ளும் தற்­போ­தைய அர­சாங்கம், மக்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­பதில் இந்­தி­யாவின் அரை சமஷ்டி முறையைப் பின்­பற்றத் தயா­ராக இல்லை என்­பது குறிப்­பிட்டுச் சொல்ல வேண்­டிய விடயம்.

சுதந்­திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடு­வ­தற்கு விதிக்­கப்­பட்ட தடை ஏற்­க­னவே, வடக்கில் நடை­மு­றைக்கு வந்து விட்டது. வட­ம­ராட்சி கிழக்கில் இரா­ணுவ கட்­டளை அதி­காரி பங்­கேற்ற சுனாமி நினை­வேந்தல் நிகழ்வு ஒன்றில், தமி­ழுக்குப் பதி­லாக சிங்­க­ளத்தில் தான் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது அர­சாங்­கத்தின் முடிவு எந்­த­ள­வுக்கு வேக­மாக வடக்கில் திணிக்­கப்­ப­டு­கி­றது என்­பதை தெளி­வாக காட்டுகிறது. 2016ஆம் ஆண்டு தமிழில் தேசிய கீதம் பாடப்­பட்ட போது, அதற்கு எதி­ராக தெற்கில் இன­வாத கூச்­சல்­களை எழுப்­பி­ய­வர்கள் பலர் இப்­போ­தைய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கி­றார்கள். அவர்­களின் கைங்­க­ரியம் தான் இது என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் கொள்ள வேண்­டி­ய­தில்லை.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது என்று அர­சி­ய­ல­மைப்­பிலோ வேறு எந்த ஆவ­ணங்­க­ளிலோ கூறப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இலங்­கையின் முத­லா­வது சுதந்­திர தினம் 1949ஆம் ஆண்டு சுதந்­திர சதுக்­கத்தில் கொண்­டா­டப்­பட்ட போது, தமிழ், சிங்­கள மொழி­களில் தான் தேசிய கீதம் பாடப்­பட்­டது.
அதற்கு ஆதா­ரங்கள் உள்­ளன. அப்­போது அர­சாங்­கத்­தினால் அச்­சி­டப்­பட்ட அழைப்­பி­தழில் கூட அது தெளி­வாக கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த நிலையில், தமிழில் தேசிய கீதம் பாட முடி­யாது என்றோ அது சட்ட விரோதம், மரபு இல்லை என்றோ யாராலும் கூற­மு­டி­யாது. தேசிய கீதத்தை இலங்கை பாடத் தொடங்­கிய காலத்தில் இருந்தே தமிழில் இசைக்கும் வழக்­கமும் இருந்­தி­ருக்­கி­றது.

சிங்­கள இன­வா­தத்­தினால் தான், தமிழ் மொழிக்கு அந்த உரிமை மறுக்­கப்­பட்­டது.
68 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் தேசிய கீதம் இசைக்க ஆரம்­பிக்­கப்­பட்ட போதும், அந்த மரபு நிலைத்து விடாமல் தடுக்கும் நோக்கில், தற்­போ­தைய அர­சாங்கம் அதற்குத் தடை­வி­தித்­தி­ருக்­கி­றது.

தமிழ் மக்­க­ளுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ளப் போவ­தாகக் கூறிக் கொண்டே அவர்­க­ளிடம் இருந்து விலகிச் செல்­வ­தற்­கான வழி­களைத் தான் அர­சாங்கம் தேடிக் கொண்­டி­ருக்­கி­றது.
தமிழ் மக்கள் தனக்கு வாக்­க­ளிக்­காது போனாலும், எல்லா மக்­க­ளுக்­கு­மான ஜனா­தி­ப­தி­யாக தான் இருப்பேன் என்று பத­வி­யேற்பு உரையில்,  கூறி­யி­ருந்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ.
அவ­ரது ஆட்சி தான், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடு­கின்ற வாய்ப்பை மறுத்­தி­ருக்­கி­றது. இந்த மறுப்பு, இலங்­கையில் தமிழ்­மொ­ழிக்­கான அங்­கீ­காரம், உரிமை குறித்த கேள்­வி­களை எழுப்ப வைத்­தி­ருக்­கி­றது.

எல்லா மக்­களும் சமத்­து­வ­மாக, சம­மான உரி­மை­க­ளுடன் வாழு­கின்ற நிலையை ஏற்­ப­டுத்தப் போவ­தாக, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ கொடுத்த வாக்­கு­று­தியை இது கேள்­விக்­குள்­ளாக்­கு­கி­றது.
இலங்­கையின் தேசிய கீதம் சிங்­க­ளத்தில் பாடப்­படும் போது பெரும்பாலான தமிழ் மக்களுக்கு அதன் அர்த்தம் புரிவதுமில்லை. அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமில்லை.
தமிழ்மொழியில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்படும் போது, அதற்கு மதிப்பளிக்கும் நிலையை உருவாக்கும் வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பையும் கெடுக்கும் வகையில் தான் அரசாங்கத்தின் முடிவு அமைந்திருக்கிறது,

இப்போது இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கின்ற நிலையில், இதிலிருந்து கவனத்தை திசை திருப்ப இன்னொரு விடயத்தை முன்னிலைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகிக் கொண்டிருப்பார்கள்.
ஏனென்றால், மறதி என்ற நோயைப் பயன்படுத்தி,  மக்களின் கவனத்தைப் புது புதுப் பிரச்சினைகளுக்குள் தள்ளுவது தான், எப்போதுமே ஆட்சியாளர்களுக்கு  பாதுகாப்பானது.

சுபத்ரா