வைராக்கிய அரசியல் நன்மை பயக்காது!

தெற்காசியப் பிராந்­தி­யத்தில் ஜன­நா­யகம் நில­வு­கின்ற நாடு­களில் ஒன்­றாக இலங்கை கணிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜன­நா­யக ஆட்சி நில­வு­கின்­றது. பல்­லின மக்­களும் பல மதங்­களைப் பின்­பற்­று­வோரும் இங்கு ஐக்­கி­ய­மாக வாழ்­கின்­றார்கள் என்ற பொது­வா­னதோர் அர­சியல் பார்­வையும் உண்டு. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கோரி முப்­பது வரு­டங்­க­ளாக ஆயுதப் போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த பின்­ன­ணியில் இந்த ஜன­நா­யகக் கணிப்பு நில­வி­யது என்­பது கவ­னத்­துக்குரி­யது.

உண்­மையில் இங்கு ஜன­நா­யகம் நில­வு­கின்­றதா என்­பது விமர்­சனப் பண்­பு­களைக் கொண்ட முக்­கி­ய­மான கேள்­வி­. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயுதப் போராட்டம் நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்குக் கேடு விளை­வித்­தி­ருந்­தது என்ற ஒரு குற்­றச்­சாட்டும் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. இதனை மறுப்­ப­தற்­கில்லை.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் மூலம் நாட்டில் ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­பட்­ட­தாக மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் பெரு­மை­ய­டித்துக் கொண்­டது. யுத்­தத்­துக்கு முடிவு கட்டி,  ஆயுத ரீதி­யான அச்­சு­றுத்­தல்கள் இல்­லாத ஒரு சூழலை உரு­வாக்கி தேர்­தல்கள் நடத்­தப்­பட்­ட­தாக அந்த அரசு விசே­ட­மாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

இணைந்­தி­ருந்த வடக்­கையும் கிழக்­கையும் நீதி­மன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் இரண்டு வெவ்வேறு மாகா­ணங்­க­ளாகத் துண்­டாடி, கிழக்கு மாகா­ணத்­துக்­கான மாகாண சபைத் தேர்தல் முதலில் நடத்­தப்­பட்­டது. தொடர்ந்து வட­மா­காண சபைக்­கான தேர்­தலும் நடத்­தப்­பட்­டது. இந்த இரண்டு தேர்­தல்­களும் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர் நடத்­தப்­பட்­டன. முன்­ன­தாக இந்­திய அமை­திப்­படை இலங்­கையின் வட–­கி­ழக்குப் பிர­தே­சங்­களில் கால் ஊன்­றி­யி­ருந்த 80களின் பிற்­ப­கு­தியில் வடக்­கு–­கி­ழக்கு மாகா­ணத்­துக்­கான ஒரு தேர்தல் யுத்த மய­மான ரா­ணு வச் சூழலில் நடத்­தப்­பட்­டது.

அதே­போன்­ற­தொரு சூழ­லில்தான் யுத்தம் முடி­வ­டைந்த பின்­ன­ரான  ரா­ணுவ மயப்­பட்ட ஒரு நிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபை­க­ளுக்­கான இரண்டு வெவ்வேறு தேர்­தல்­களும் நடத்­தப்­பட்­டன.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தி­க­ளிலும் இலங்­கையில், குறிப்­பாக வடக்கு–கிழக்குப் பிர­தே­சங்கள் உள்­ளிட்ட அனைத்துப் பகு­தி­க­ளிலும் தேர்­தல்கள் நடத்­தப்­பட்­டன. அர­சியல் உரி­மைக்­கான விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுதப் போராட்டம் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­யாக வெளி உல­குக்குக் காட்­டப்­பட்ட போதிலும், யுத்த மோதல்கள் கார­ண­மாக தேர்­தல்கள் தள்ளி வைக்­கப்­ப­ட­வில்லை. ஒத்தி வைக்­கப்­ப­ட­வில்லை. ஆயுத ரீதி­யான அச்­சு­றுத்­த­லுக்குத் தேர்தல் நட­வ­டிக்­கைகள் இலக்­காகி செய­லற்றுப் போக­வில்லை.

வேடிக்­கை­யான அர­சியல் நிலை­மைகள்

இதன் கார­ண­மா­கத்தான் இலங்­கையின் ஜன­நா­யகத் தன்மை சிறப்­பா­ன­தாகக் கணிக்­கப்­பட்­ட­தாகக் கருத வேண்டி உள்­ளது. ஆனால் யுத்தம் முடி­வுக்கு வந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஆயுத மோதல்கள் இல்­லாத சூழலில் இடம்­பெற்ற தேர்­தல்கள் ஜன­நா­யக சூழலில் நடந்­த­னவா என்­பது கேள்­விக்குரி­யது.

ஏனெனில் ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, ஆயு­தங்கள் மௌனிக்­கப் பட்­டி­ருந்த போதிலும், மோதல்கள் இடம்­பெற்ற வடக்­கிலும் கிழக்­கிலும்  ரா­ணுவ மய­மான நிலையில் சிவில் வாழ்க்கை அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாகி இருந்­தது. அதனால் அச்சம் மிகுந்த ஒரு நிலை­யில்தான் தேர்­தல்கள் நடை­பெற்­றன.

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் தேர்­தல்கள் மட்­டு­மல்ல. அரச நிர்­வா­க­மும்­கூட, ஜன­நா­யகம் என்ற போர்­வையில் உரிமை மறுப்பு நிலை­யி­லான ஆட்­சி­யா­கவே நடத்­தப்­பட்­டது. நீதித்­துறை அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யது. அர­சி­ய­ல­மைப்பில் எதேச்­ச­தி­கா­ரத்­துக்கு வழி வகுக்கும் அம்­சங்­களை உள்­ள­டக்கி திருத்தம் செய்­யப்­பட்­டது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜன­நா­யக ஆட்சி என்ற போர்­வையில் தனி­ம­னித அதி­காரம் வரை­மு­றை­யற்ற வகையில் கோலோச்­சி­யது.

இந்த எதேச்­ச­தி­காரப் போக்கு கார­ண­மா­கவே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. இரு­கட்சி அர­சாங்கம் உரு­வா­கி­யது. அதற்கு நல்­லாட்சி அர­சாங்கம் என்ற பெயரும் சூட்­டப்­பட்­டி­ருந்­தது. இந்த அர­சாங்­கத்தை மிகுந்த நம்­பிக்­கை­யோடு மக்கள் உரு­வாக்­கி­னார்கள். ஆனால் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் தேர்தல் உறு­திமொ­ழி­க­ளையும் நல்­லாட்சி அரசு காற்றில் பறக்­க­விட்­டி­ருந்­தது.

அதி­காரப் போட்­டியில் சிக்கி, அர­சி­ய­ல­மைப்­பையே கேள்­விக்குள்­ளாக்கும் வகை­யி­லான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி நிறை­வேற்­றினார். பிர­தமர் பதவி நீக்கம் செய்­யப்­பட்டார். நாடா­ளு­மன்றம் முடக்­கப்­பட்­டது. காலத்­துக்கு முந்­திய நிலையில் பொதுத் தேர்­த­லுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான வகையில் அதன் விதி­களை மீறு­கின்ற வகை­யி­லான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதனால் நாட்டில் அர­சாங்­கமே இல்­லா­தது போன்­ற­தொரு நிலைமை உரு­வா­கி­யது. ஒரு கட்­டத்தில் இரண்டு பிர­த­மர்கள் அதி­கா­ரத்தில் இருக்­கின்ற வேடிக்­கை­யான அர­சியல் நிலை­மையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டி­ருந்­தது.

எதேச்­ச­தி­கார ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்ட போதிலும், அது நல்ல ஆட்­சி­யாக நடை­பெ­ற­வில்லை. ஜன­நா­யகம் அங்கு பாது­காக்­கப்­ப­ட­வில்லை. அதனைத் தழைத்­தோங்கச் செய்ய எவரும் முற்­ப­ட­வில்லை. இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில்தான் 2019 ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்­றது.

அமோக வெற்றி; ஆனால் சிறு­பான்மை அரசு

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பல­வீ­னமும், செயல் வல்­ல­மை­யற்ற போக்கும், ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணான நட­வ­டிக்­கை­களும்

மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்குத் தவ­றி­ய­மையும்  ஜனா­தி­பதி தேர்­தலின் மூலம், ராஜ­பக்ஷக்­களின் மீள் வரு­கைக்கு உர­மூட்­டின. இன­வாதப் பிர­சா­ரமும், சிறு­பான்மை இன மக்­களை இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாகக் காட்­டிய வலி­மை­யான அர­சியல் நிலைப்­பாடும் பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் செல்­வாக்கு பெற்­றி­ருந்­தது. இந்த செல்­வாக்கே கோத்­த­பாய ராஜ­பக்ஷவை 13 லட்சம் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­க­ளினால் ஜனா­தி­ப­தி­யாக வெற்றி பெற வழி வகுத்­தது.

அர­சியல் வர­லாற்றில் முதற்தட­வை­யாக பெரும்­பான்மை இன மக்­க­ளா­கிய சிங்­கள மக்­களின் வாக்­கு­களை மட்­டுமே பெற்று அதிக பெரும்­பான்­மை­யுடன் ஒரு ஜனா­தி­பதி தெரி­வா­கிய சம்­பவம் இந்தத் தேர்­தலில் நடந்­தே­றி­யது.

இந்த வகை­யி­லான ராஜ­பக்ஷக்­களின் மீள் எழுச்­சி­யா­னது இன­வாத அர­சியல் போக்­கிற்குப் பல­மான அடித்­த­ளத்தை இட்­டுள்­ளது. சிறு­பான்மை இன­ மக்­களின் வாக்­கு­க­ளிலும், அவர்­க­ளு­டைய ஆத­ர­விலும் பேரின அர­சியல் கட்­சிகள் தங்கி இருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை என்ற புதிய பாதையை அர­சியல் களத்தில் திறந்­து­விட்­டுள்­ளது.

தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ள­தை­ய­டுத்து, ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக்ஷ­வினால் சிறு­பான்மை அரசு ஒன்­றையே புதிய அர­சாங்­க­மாக உரு­வாக்க முடிந்­துள்­ளது. பெரும்­பான்மை பலத்தைக் கொண்­டி­ருந்த போதிலும், தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­வி­யினால் மனம் தளர்ந்த கார­ணத்­தி­னாலோ அல்­லது வேறு உள்­நோக்கம் கொண்ட அர­சியல் கார­ணங்­க­ளி­னாலோ என்­னவோ பத­வியில் இருந்த ரணில் விக்­ர­ம­சிங்க பிர­தமர் பத­வியைத் தன்­னிச்­சை­யாகத் துறந்து வெளி­யே­றினார். அவ­ரது  ரா­ஜி­நா­மாவைத் தொடர்ந்து ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கமும் இல்­லாமல் போனது.

பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் மக்­கள்  தெரிவு செய்­யப்­பட்ட ஓர் அர­சாங்­கத்தை ஐக்­கிய தேசிய கட்சி மக்­களை நட்­டாற்றில் கைவிட்­ட­து­போன்று இவ்­வாறு கைவிட்டுச் சென்­றி­ருக்கக் கூடாது. பிர­தமர் பத­வியை ரணில் விக்­­ர­ம­சிங்க தன்­னிச்­சை­யாக  ரா­ஜி­நாமா செய்­தது ஜன­நா­யக முறை­மைக்கு மாறான ஒரு செயற்­பா­டாகும் என்று ஜன­நா­ய­கத்தின் மீது பற்­றுள்­ள­வர்கள் மன­துக்குள் புழுங்­கு­கின்­றார்கள்.

இவ­ரு­டைய  ரா­ஜி­நா­மா­வை­ய­டுத்தே புதிய பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக்ஷவை நிய­மிப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் புதிய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ­வுக்குக் கிட்­டி­யது என்று அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். ரணில் விக்­ர­ம­சிங்க பிர­தமர் பத­வியை  ரா­ஜி­நாமா செய்­யா­விட்டால் புதிய ஜனா­தி­ப­தி­யுடன் அவ­ருக்கும் அவ­ரு­டைய அர­சுக்கும் அர­சியல் ரீதி­யாகப் பெரும் இடைஞ்­சல்கள் ஏற்­பட்­டி­ருக்கும் என்­பதை அவர்கள் ஏற்­றுக்­கொண்­டாலும், மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்கம் கிட்­டத்­தட்ட பத்து மாதங்கள் பத­வியில் இருப்­ப­தற்­காகக் கொண்­டி­ருந்த அதி­கா­ரத்தை விட்டுக் கொடுத்­தி­ருக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறு­கின்­றனர்.

அந்த அதி­கா­ரத்தை, அர­சியல் உரி­மையை ஐக்­கிய தேசிய கட்சி நடு­வ­ழியில் கைவிட்டுச் சென்­றதன் கார­ண­மா­கவே புதிய பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் பத­வி­யேற்க முடிந்­தது. இவ்­வாறு புதிய அர­சாங்கம் ஒன்று உரு­வா­கும்­போது, பாரா­ளு­மன்­றத்தில் புதிய அர­சுக்­கான பெரும்­பான்மை பலத்தைக் காட்ட வேண்­டிய, தவிர்க்க முடி­யாத பொறுப்பு புதிய பிர­த­ம­ருக்கு உண்டு.

ஆனால் பிர­த­மரின் ராஜி­நாமா கார­ண­மா­கவே புதிய அர­சாங்கம் உரு­வா­னது. புதிய அரா­சங்­கத்தின் நாடா­ளு­மன்ற அமர்­வு­களை ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஒரு மாதத்­துக்கு இடை­நி­றுத்­தி­யதன் மூலம், நாடா­ளு­மன்ற பலத்தை உட­ன­டி­யாகக் காட்ட வேண்­டிய பொறுப்பில் இருந்து அது விடு­பட்­டுள்­ளது.

மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்கள்

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜபக்ஷ அந்தப் பத­விக்­ கு­ரிய  நிறை­வேற்று அதி­கா­ரங்கள் அனைத்­தையும் கொண்­டி­ருக்­க­வில்லை. ஜனா­தி­பதி பத­வியை இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற அர­சியல் விருப்­பத்தை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் பலரும் முதலில் விருப்பம் தெரி­வித்­தி­ருந்த போதிலும், அந்தப் பத­வியை இல்­லாமல் செய்­வ­தற்கு அவர்கள் முயற்­சிக்­க­வில்லை. மாறாக மீண்டும் அந்தப் பத­வியைக் கைப்­பற்றி அதி­கா­ரத்தில் இருப்­ப­தற்கே அவர்கள் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

அந்த வகை­யி­லேயே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நடந்து கொண்டார். இருப்­பினும் நல்­லாட்சி அர­சாங்கம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் பல­வற்றை 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் மூலம் இல்­லாமல் செய்­துள்­ளது. ஜனா­தி­பதி ஆட்சி முறை உரு­வாக்­கப்­பட்­ட­போது அந்தப் பத­விக்கு இருந்த அதி­கா­ரங்­க­ளிலும் பார்க்க அதிக அதி­கா­ரங்­களை ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்­த­போது மஹிந்த ராஜ­பக்ஷ 18 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்­டத்தின் மூலம் உரு­வாக்­கி­யி­ருந்தார்.

இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்க முடி­யாது என்ற நிபந்­த­னையை இந்தத் திருத்தச் சட்டம் மாற்றி அமைத்­தது. ஒருவர் எத்­தனை தட­வைகள் வேண்­டு­மா­னாலும் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்க முடியும் என்ற நிலைமை விசே­ட­மாக உரு­வாக்­கப்­பட்­டது. அத்­துடன் ஜனா­தி­பதி என்ற தனி­ம­னித அடிப்­ப­டையில் ஜன­நா­யக நடை­மு­றை­களை மீறிச் செயற்­ப­டக்­கூ­டிய விட­யங்­களில் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த சில கட்­டுப்­பா­டு­க­ளையும் 18 ஆவது திருத்தச் சட்டம் நீக்கி ஜனா­தி­ப­திக்கு அள­வற்ற அதி­கா­ரங்­களை வழங்­கி­யி­ருந்­தது.

நல்­லாட்சி அர­சாங்கம் இவை அனைத்­தையும் இல்­லாமல் செய்­த­துடன், ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையின் தலை­வ­ராக இருக்­க­லாமே தவிர, அவர் எந்­தவோர் அமைச்­சையும் பொறுப்­பேற்று அமைச்­ச­ராக இருக்க முடி­யாது என்ற நிபந்­த­னை­யையும் உள்­ள­டக்­கி­ய­தாக 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது. இந்தச் சட்­டத்தை உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன வைக் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை.

ஆனால் புதி­தாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஜனா­தி­ப­தியை 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் நிபந்­த­னைகள் கட்­டுப்­ப­டுத்தி உள்­ளன. பெய­ர­ளவில் அவர் அமைச்­ச­ர­வை­யி­னதும், அர­சாங்­கத்­தி­னதும் தலை­வ­ராக இருக்­க­லாமே தவிர, அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருக்க முடி­யாது. அந்த அதி­கா­ரங்கள் சட்­ட­வாக்­கத்­து­றை­யா­கிய நாடா­ளு­மன்­றத்­துக்கும் குறிப்­பாக பிர­த­ம­ருக்கும் இந்தத் திருத்தச் சட்டம் வழங்கி உள்­ளது.

இத்­த­கைய ஒரு நிலை­­யில்தான் புதிய ஜனா­தி­பதி தெரிவு செய்­யப்­பட்டு பதவி பொறுப்பை ஏற்­றுள்ளார். ஆனால் அவ­ரு­டைய செயற்­பா­டுகள் அனைத்தும், முழு­மை­யான அதி­கா­ரங்­களைக் கொண்ட ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.  பாரா­ளு­மன்றம் முடக்­கப்­பட்­டுள்ள நிலையில் அந்த அதி­கா­ரங்­களை அவர் சுதந்­தி­ர­மாகப் பயன்­ப­டுத்­து­கின்ற ஒரு போக்­கையே காண முடி­கின்­றது.

பொதுத்  தேர்தல் ஒன்றை நாடு எதிர்­நோக்கி உள்­ளது. தேர்­தலில் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற நாடா­ளு­மன்­றத்­துடன் கூடிய நிலை­யி­லேயே ஜனா­தி­பதி முழு­மை­யான அர­சாங்­கத்தின் தலை­வ­ராகத் திகழ முடியும். அது­வ­ரையில் ஒரு தற்­கா­லிக அர­சாங்­கத்தின் தலை­வ­ரா­கவே அவர் இருக்க முடியும்.

இந்தத் தற்­கா­லிக அர­சாங்­கத்தின், கிட்­டத்­தட்ட முழுச் செயற்­பா­டு­க­ளையும் ஜனா­தி­ப­தியே முன்­னெ­டுத்து வரு­கின்றார். இந்தத் தற்­கா­லிக அர­சுக்குப் பொறுப்­பா­க­வுள்ள நிலை­யி­லேயே, நிலை­யா­னதோர் அர­சாங்­கத்தின் நிரந்­த­ர­மான நிலைப்­பா­டு­க­ளையும் கொள்கை நிலை­மை­க­ளையும் தெளி­வு­ப­டுத்­து­வது போன்ற கருத்­துக்­களை அவர் வெளி­யிட்டு வரு­கின்றார்.

கணி­ச­மான நிறை­வேற்று அதி­கா­ரங்­களில் முக்­கி­ய­மா­ன­வற்றைக் கொண்­டி­ருக்கப் போகின்ற பாரா­ளு­மன்றம் பத­வி­யேற்­கும்­போது, அத­னுடன் இணைந்தே அர­சாங்­கத்தின் கொள்கை நிலைப்­பா­டு­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். ஜனா­தி­ப­தியின் கட்­சியே பாரா­ளு­மன்றப் பலத்தைக் கொண்­டி­ருந்­தா­லும்­கூட, அர­சி­ய­ல­மைப்பு விதி­க­ளுக்­க­மை­வாக அதி­கார பலத்தைக் கொண்­டுள்ள பிர­தமர் ஜனா­தி­ப­தியின் அனைத்துக் கொள்கை நிலைப்­பாட்­டையும் ஏற்­றுக்­கொண்­டி­ருப்பார் என்­ப­தற்கு உத்­த­ர­வா­த­மில்லை.

ஏனெனில் பலரும் எதிர்­பார்ப்­பது போன்று பொது­ஜன பெர­முன பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் மஹிந்த ராஜ­பக்ஷவே அநே­க­மாகப் பிர­தமர் பத­வியை ஏற்­றி­ருப்பார். அவர் முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக – எதேச்­ச­தி­காரப் போக்கில் அதி­கா­ரங்­களைக் கொண்­ட­வ­ராக – தனக்கு நிகர் எவ­ருமே இல்லை என்ற இறு­மாப்­போடு ஆட்சி நடத்­தி­யவர்.

அவ்­வாறு அதி­கார பலத்­துடன் திகழ்ந்த அனு­ப­வத்தைக் கொண்­டுள்ள அவர் தனது சகோ­த­ர­னாக இருந்த போதிலும், ஜனா­தி­ப­தியின் போக்­கு­களை அனு­ச­ரித்து, அதற்­கேற்ற வகையில் நடந்து கொள்­வாரா என்­பது தீவிர சிந்­த­னைக்­கு­ரிய விட­ய­ம். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்ள நிலையில், பிர­த­மரே நிறை­வேற்று அதி­கா­ரங்கள் பல­வற்றைக் கொண்­டி­ருக்கப் போகின்றார். அத்­த­கைய நிலையில்      இர­ண்டாம் நிலையில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ செயற்­ப­டுவார் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

இத்­த­கைய ஒரு நிலையில் ஜனா­தி­பதி அக்­க­றை­யற்ற போக்கை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பிர­த­மரும் பாராளு­மன்­றமும் ஒத்­தி­சைவைக் கொண்­டி­ருக்­குமா என்­பது தெரி­ய­வில்லை.

அபி­வி­ருத்தி ஒன்றே நோக்கம். அபி­வி­ருத்தி ஒன்­றி­லேயே குறி­யாக இருந்து தனது அரசு செயற்­படும் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ தனது கொள்கைப் பிர­க­ட­னத்தை அவ்­வப்­போது வெளி­யிட்டு வரு­கின்றார். ஜனா­தி­ப­தியும் நாடா­ளு­மன்­றமும் இணைந்த ஒன்றே அர­சாங்­க­ம். பொதுத் தேர்­தலில் சட்­ட­பூர்­வ­மான நிரந்­தர பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­படும் வரையில் காபந்து அர­சாங்­கமே நாட்டின் நிர்­வாக பொறுப்­பு­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்து செயற்­பட வேண்டும்.

வைராக்­கிய அர­சியல் வேண்டாம்

இந்த நிலையில் அபி­வி­ருத்தி மட்­டுமே அர­சாங்­கத்தின் நோக்கம். அபி­வி­ருத்­தியின் ஊடா­கவே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும். குறிப்­பாக இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் விட­யத்தில் அதி­காரப் பகிர்வு என்ற பேச்­சுக்கே இட­மில்லை. அபி­வி­ருத்­தியை முழு­மை­யாக முன்­னெ­டுப்­பதன் ஊடாகப் பிரச்­சி­னைகள் தீர்ந்­து­விடும் என்று ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக்ஷ கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்றார்.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பிலும் அவர் கடும் போக்­கி­லான கருத்­தையே வெளி­யிட்­டுள்ளார். காணாமல் போன­வர்கள் உயிரிழந்திருக்கலாம். அதற்கான சான்றிதழ்களும் நட்ட ஈடும் வழங்கலாம் என்ற அவருடைய கருத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளை மனம் நோகச் செய்துள்ளது. குறிப்பாக ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பான முறையில் செயலாற்ற வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை இந்தக் கருத்து உதாசீனம் செய்வதாகவே அவர்கள் உணர்கின்றார்கள்.

இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வே வேண்டும் என்பது சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடாகும். அதனை முற்றாக நிராகரிக்கும் வகையில் கடும் நிலைப்பாட்டில் அதிகாரப் பகிர்வே கிடையாது என்ற அவருடைய கூற்று நிலைமைகளை மோசமாக்கவே வழிகோலும் என்ற அச்சமும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது.

ஜனநாயக வழிமுறைகளையும், செல்நெறியையும் கொண்ட பல்லின மக்கள் வாழ்கின்ற பல மதங்களை வழிபடுபவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மை இன மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற போக்கில் அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாது. பெரும்பான்மை மக்கள் விரும்பாத விடயங்கள் பற்றி பேசவே முடியாது. அத்தகைய எந்த விடயத்தையும் செய்யவும் முடியாது என்று வைராக்கிய அரசியல் போக்கில் கருத்துக்களை வெளியிடுவதும் நாட்டின் சீரானதோர் ஆட்சிக்கு வழி வகுக்கமாட்டாது.

எனவே, பல்லாண்டு காலமாக பல்லின மக்கள் இணைந்து வாழ்ந்து வந்த வரலாற்றைக் கொண்ட இந்த நாடு பூகோள அரசியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது. பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டை இன ஐக்கியமும், இன நல்லுறவுமே முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்கின்ற அரசியல் வலிமையைக் கொண்டிருக்கும். இதனைப் புரிந்து கொண்டு அரசு அதற்கேற்ற வகையிலான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும். இதுவே வறுமை நிலையில் வசதிகளையும் வாய்ப்புக்களையும் எதிர்பார்த்துள்ள இந்த நாட்டின் ஏழை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..

பி.மாணிக்­க­வா­சகம்