வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்கக்கோரி போராட்டம் நடத்தும் அப்பாவி இந்தியர்கள்: நடிகை ஆர்த்தி

உலக வரலாற்றிலே வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க வேண்டுமென போராட்டம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்வது ஆச்சர்யம் என நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் அரசியல்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதுபோலவே அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் குடியுரிமைச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.