நியூஸிலாந்து காணாமல்போன இருவரை தேடும் பணி இடை நிறுத்தம்!

சீரற்ற காலநிலைக் காரணமாக நியூஸிலாந்தின், வைட் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி காணாமல்போன இருவரை தேடும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தின்போது குறித்த தீவில் 47 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் வைத்தியசாலையில் தீக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையிலேயே வைட் தீவில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பின்போது காணாமல்போன இருவரை தேடும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

சிட்னியைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியொருவரும், 40 வயதுடைய நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.