நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடித்ததில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை திடீரென இன்று வெடித்ததில் அங்கு சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் 5 பேர் உயிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் பலரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘சுமார் 100 சுற்றுலாப்பயணிகள் வெள்ளைத் தீவில் எரிமலையை பார்க்கச் சென்றிருந்தனர். திடீரென ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக பலர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தே தற்போது எங்கள் சிந்தனை உள்ளது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் தெரிவித்தார்.
இந்த எரிமலை வெடிப்பின் தாக்கம், அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெள்ளைத் தீவில் உள்ள எரிமலைகள் வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்தும் சுற்றுலாப்பயணிகள் ஏன் அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
எரிமலை வெடிப்பின் தாக்கம் அதற்கான அளவுகோலில் 5 ஆக பதிவானால், விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal