மாவீரர் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கில் உணர்வுபூர்வமாக அதனை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயி லும் இல்லங்கள் தயாராகியுள்ளன.
2009 ஆம் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூட வடக்கு கிழக்கு மக்களினால் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வடக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுகூர மக்கள் தயாராகிவருகின்றனர்.
மாவீரர்நாள் நினைவேந்தல் குழுவினர், பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வடக்கிலுள்ள துயிலுமில்லங்களைப் பொறுப்பேற்று சிரமதானப்பணிகளை மேற் கொண்டு வருகின்றன.
குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ளமையினால் அதற்கு முன்பாகவுள்ள காணியை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பொறுப்பேற்று நினைவு தினத்திற்கான ஏற்பாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று பூநகரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் பொது மக்கள் பொறுப்பேற்று நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.