பத்தாண்டுகளாக கூரையில் வாழ்ந்த மலைப்பாம்பு!

சீனாவிலுள்ள அழகு நிலைய உட்கூரையில் 10 ஆண்டுகளாக வசித்து வந்த மலைப்பாம்பு கூரையை பிளந்துக்கொண்டு கீழே விழுந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின்  குவாண்டாங் மாகாணத்தில் உள்ள போசன் நகரில் பிரபலமான அழகு மற்றும் உடல்நல ஆரோக்கிய நிலையம் ஒன்று உள்ளது.

குறித்த நிலையத்தின் உட்கூரையின் மீது கடந்த வாரம் ஏதோ சலசலப்பு கேட்டது. சத்தம் அதிகமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென கூரை உடைந்த போது, 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கீழே விழுந்த போது அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

இதையடுத்து  காவல் துறைக்கும் வனத்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பு பிடிப்பவர் உதவியுடன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்பு அந்த மலைப்பாம்பு மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

‘சுமார் 20 கிலோ எடை உள்ள இந்த பாம்பு  10 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்திருக்கக் கூடும். இந்த பகுதியில் அதிக அளவில் உணவகங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியில் பெருகி உள்ள எலிகளை உட்கொள்ள பாம்பு வந்திருக்கலாம்’ என பாம்பை பிடித்தவர் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கூரை சுவர்களில் அத்தகைய பாம்பு வாழ்வதைப் பற்றி கேள்விப்பட்டதாக அழகு நிலையத்தின் உரிமையாளர்  தெரிவித்துள்ளார்.