அகதியின் உடலை திருப்பி அனுப்ப உதவ மறுக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட ஆப்கானிஸ்தான் அகதியின் உடலை ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது.

சயத் மிர்வாஸ் ரோஹனி என்ற 32 வயது அகதி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பத்தில் சிக்கல் நீடித்து வருகின்றது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மருத்துவராக பணியாற்றிய இவர், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் மனுஸ்தீவில் நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மனநல பாதிப்பை எதிர்கொண்ட நிலையில, மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

ஆறு மொழிகள் பேசும் திறன்கொண்ட ரோஹனி, 2017ம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு கொண்டு வரப்பட்டு சமூக தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், கடந்த அக்டோபர் 15ம் தேதி தற்கொலை செய்துகொண்ட அவரின் உடலை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு உதவ மறுப்பதாகக் கூறப்படுகின்றது. .

“இது போன்ற பல விவகாரங்களில் ஆஸ்திரேலிய அரசு (உடலை ஒப்படைக்க) பங்களிப்பு செய்திருக்கிறது. ஆனால் இம்முறை இக்குடும்பத்திற்கு உதவ மறுக்கிறது,” என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல்.

“இது போன்று ஆஸ்திரேலிய அரசு நடந்து கொண்டு நான் பார்த்ததே இல்லை. கடந்த 10 பத்தாண்டுளில் குடிவரவுத்தடுப்பில் நடந்த பல மரணங்களை பார்த்திருக்கிறேன்,” எனக் கூறியுள்ள தேசிய நீதி திட்டத்தின் வழக்கறிஞர் ஜார்க் நியூஹவுஸ் இதை தரம்தாழ்ந்த நிலையாக எண்ணுகிறார்.

இந்த சூழலில், Refugee Action Coalition என்ற அகதிகள் நல அமைப்பு சார்பாக 15,000 டாலர்கள் சேகரிக்க விடுவிக்கப்பட்ட இணைய கோரிக்கையின் மூலம் 15,372 டாலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையின் மூலம், அகதியின் உடல் ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தின் ஒப்படைக்கப்படும் என நம்பப்படுகின்றது.