11பேர் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் : மூவரை அரச சாட்­சி­யாக்குவதற்கு சட்டமா அதிபர் திட்டம்!

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்­னா­கொட, முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் டி.கே.பி. தஸ­நா­யக்க உள்­ளிட்ட 14 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடர்ந்­துள்ள நிலையில், குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட மூவ­ருக்கு  பொது மன்­னிப்­ப­ளித்து அவர்­களை வழக்கின்  அரச சாட்­சி­க­ளாக பயன்­ப­டுத்த சட்ட மா அதிபர் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இதற்­கான ஆரம்­ப­க்கட்ட நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பூர்த்­தி­யாகி­யுள்­ள­தாக அத்­தி­ணைக்­க­ளத்தின் உயர் மட்ட தக­வல்கள் கேச­ரிக்குத் தெரி­வித்­தன.

வெள்ளை வேனில் 11 பேரைக் கடத்திச் சென்று கப்பம் பெற்று காணாமல் ஆக்­கி­யமை தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்­டமை தொடர்பில் 16 சந்­தேக நபர்கள் சி.ஐ.டி.யால் கைது செய்­யப்பட்டு  கோட்டை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்பட்ட நிலையில், முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்­னா­கொட கைது செய்­யப்­ப­டாத போதும் சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டார். அதன்­படி நீதிவான் நீதி­மன்ற அரிக்­கை­களின் பிர­காரம் சந்­தேக நபர்­களின் எண்­ணிக்கை 17  ஆகும். இந் நிலையி­லேயே அவர்­களில் மூவரை, அவர்கள் இக்­குற்றச் செயல்­களின் குற்ற உத­வி­யா­ளர்­க­ளாக இருந்­துள்­ளதை வைத்து  பிர­தான  பிர­தி­­வாதிக­ளுக்கு எதி­ரான சாட்­சி­யா­ளர்­க­ளாக பயன்படுத்த தீர்­மானிக்­கப்பட்­டுள்­ளது.

அதன்­படி நேற்று முன்தினம் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட 17 ஆவது சந்­தேக நப­ரான கடற்­படை சிப்பாய் அலுத்­கெ­தர உப்புல் பண்­டார பிர­தான அரச சாட்­சி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ளார். அவரே கன்சைட் முகாமில் குறித்த கடத்­தப்பட்­ட­வர்கள் இருந்த போது வீட்­டா­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொள்ள உத­வி­ய­தாக விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­விட லக்ஷ்மன் உத­ய­கு­மார மற்றும் தம்­மிக தர்­ம­தாஸ ஆகிய இரு கடற்­படை உளவுப் பிரிவின் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் அரச சாட்­சி­யாக பயன்­ப­டுத்த திட்­ட­மி­டப்­ப­ட்­டுள்­ளது.

அதன்­படி, அட்­மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்­னா­கொட, சிறப்பு புல­னா­ய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன் கொமான்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன் கொமாண்டர் தரத்­தை உடையவரும் தற்­போது கொமாண்டராக பதவி உயர்த்­தப்பட்­டுள்ளவருமான சுமித் ரண­சிங்க, கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, கித்­சிறி மற்றும் சிறப்பு புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ரா­கவும் கடற்­படை ஊடகப் பேச்­சா­ள­ரா­கவும் அப்­போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க, கடற்­படை வீரர்­க­ளான கஸ்­தூ­ரிகே காமினி, அரு­ண­து­ஷார மெண்டிஸ் மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி, சஞ்­ஜீவ பிரசாத் திலங்க சேன­ராத்ன, அண்­ணாச்சி என­ப்படும் உபுல் சமிந்த,  ஹெட்டி ஹெந்தி,  என்டன் பெர்னாண்டோ, சம்பத் ஜனக குமார ஆகிய 14 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனை விசாரிக்க சிறப்பு ட்ரயல் அட்பார் கோரப்பட்டுள்ள நிலையில் விரைவில் அதற்கான நியமனம் கிடைக்கப் பெறும் என நம்பப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களத்  தகவல்கள் தெரிவித்தன.