கண்களுக்குள் பச்சை குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்!-அவுஸ்ரேலியா

பச்சை குத்திக்கொள்வதில் தீராத வெறிகொண்ட ஒரு பெண், கண்களில் பச்சை குத்திக்கொண்டதால் பார்வை இழக்கும் நிலைக்கு சென்றார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ’டிராகன் பெண்  ’ என்று அழைக்கப்படும் Amber Luke (24)க்கு பச்சை குத்திக்கொள்வது என்றால் அப்படி ஒரு ஆசை.

சுமார் 26,000 டொலர்கள் செலவு செய்து, தலை முதல் பாதம் வரை 200 இடங்களில் பச்சை குத்திக்கொண்டுள்ள Amber, தனது கண்களையும் நிறம் மாற்றிக்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி கண்களில் பச்சை குத்திகொள்வது என தீர்மானித்தார் Amber. அவரது கண்களுக்குள் 40 நிமிடங்கள் செய்யப்படும் ஆபத்தான சிகிச்சை ஒன்றின் மூலம் நீல நிற சாயம் செலுத்தப்பட்டது.

கண்களுக்குள் 10 உடைந்த கண்ணாடித்துண்டுகளை எடுத்து தேய்த்தது போன்ற வலி ஏற்பட, துடித்துப்போனார் Amber. அதோடு மட்டுமில்லாமல், அவரால் பார்க்கவும் முடியவில்லை. அதே நிலைமையில் மூன்று வாரங்கள் இருந்த நிலையில், அதன் பின்னர் அவருக்கு பார்வை திரும்பியது.

நீலக்கண்கள் கொண்ட வெள்ளை டிராகன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் Amber, தான் எடுத்த முடிவைக் குறித்து தான் கொஞ்சமும் வருத்தப்படவில்லை என்கிறார், அதே நீலக்கண்களை சிமிட்டியபடி.