ஜி.என்.ஆர்.குமாரவேலன் – அருண் விஜய் இணையும் சினம்!

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘சினம்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாஃபியா’ படத்தை முடித்துக் கொடுத்தார் அருண் விஜய். இதனைத் தொடர்ந்து ‘பாக்ஸர்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால், அதன் படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் அருண் விஜய்.

இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கியது. நாயகியாக பல்லக் லால் வாணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்துக்கு ‘சினம்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்தத் தலைப்பை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்தப் படத்தை மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் விஜயகுமார் தயாரித்து வருகிறார். ஷபீர் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.