மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வு – 2011

தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27 – 11 – 2011 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தமது மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் தமது உயிரையே விலையாக கொடுத்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் உன்னதமான அர்ப்பணிப்பை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள்.

மாலை 4 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு சிறி அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைக்க, ஆஸ்திரேலிய கொடியை, செயற்பாட்டாளர் திரு. கிருஸ்டி அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசின் விக்ரோரிய மாநில பிரதிநிதி திரு. டொமினிக் அவர்களும் ஏற்றிவைக்க ஆரம்பமான நிகழ்வில் அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.

தொடர்ந்து எழுபத்தைந்து மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் நின்று, எங்களின் சுதந்திர வாழ்வுக்காக தங்களின் உயிரையே அர்ப்பணித்த அந்த உத்தம சீலர்களுக்கு கண்ணீராலும் பூக்களாலும் வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் அடுத்ததாக இடம்பெற்ற அகவணக்கத்தை தொடர்ந்து துயிலும் இல்ல பாடல் மண்டபத்தை நிறைத்துக்கொண்டது. அரங்கின் முன்பாக அமைக்கப்பட்ட திரையில் பாடலின்போது காண்பிக்கப்பட்ட தாயகத்தின் துயிலுமில்ல காட்சிகளும் அங்கு எமது உறவுகள் விட்ட கண்ணீரும் மண்டபத்திலும்கூட அனைவரது மனங்களையும் கசியச் செய்தன.

உலகெங்கும் எமது உறவுகள் பரந்துவாழ்ந்து கண்டங்கள் தாண்டி எங்கள் தாயகத்தை பிரிந்திருந்தாலும், இந்த மாவீரச்செல்வங்கள் தங்கள் தியாகத்தினால் எமது மக்களின் உரிமைகளுக்கு மட்டும் உறுதியளித்துசெல்லவில்லை, எமது இனத்தின் ஒற்றுமைக்கான சக்தியையும் வழங்கிச்சென்றுள்ளார்கள் என்ற உண்மை அந்த தருணத்தில் உணரப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளாக முதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிக்கையும், அதனைத் தொடர்ந்து உறுதியுரையும் இடம்பெற்றது.

”தமிழீழ தாய்நாட்டுக்காக – தமது இன்னுயிரை ஈந்த

மாவீரர்களை நினைவு கூரும் – இப்புனித நன்நாளில்

ஈழத்தமிழனாகிய நான் – உலகின் எந்தத்திசையில் வாழ்ந்தாலும்

தமிழீழமே எனது இலட்சியம் என்றும் – சுதந்திரமும் இறைமையுமுள்ள

தமிழீழத்தனியரசான – எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக

அயராது உழைப்பேன் என்றும் – உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்

”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

என்ற உறுதி மொழி வாசிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் எழுந்து நின்று அதனை உரத்துக்கூறி பிரமாணம் செய்துகொண்டனர்.

அதனை அடுத்து, ”கார்த்திகை 27” பாடலுக்கான நிருத்தாலயா நடனப்பள்ளி மாணவர்களின் நடனம் இடம்பெற்றது. அதை தொடர்ந்து செல்வி சிவகாமி திலகராஜன் தான் தாயகத்துக்கு சென்று மாவீரர் துயிலும் இல்லத்தை தரிசித்த அனுபவத்தையும், மாவீரர்களின் தியாகத்தையும் ஆங்கிலத்தில் வழங்கினார்.

அடுத்தநிகழ்வாக, ஆங்கிலப்பாடல் ஒன்றை செல்வி கீதா தெய்வேந்திரன் அவர்கள் உணர்வுமயமாக வழங்கினார். பாடலின்போது அகலத்திரையில் அதியுச்ச தியாகத்தை மேற்கொண்ட மறவர்களின் காணொளிகள் காட்சியாகின.

தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் விக்ரோரிய மாநில பிரதிநிதி திருமதி ஜெனனி பாலா மாவீரர்களின் ஈகம் தொடர்பாகவும், அவர்களின் இலட்சியத்திற்காக நாடு கடந்த தமிழீழ அரசும் பயணிக்கும் என்று உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, திருமதி மீனா இளங்குமரனின் நடனாலய நடனப்பள்ளி மாணவ மாணவிகள் வழங்கிய ”சத்தியவேட்கை” என்ற நாட்டிய நாடகம் அனைவரின் நெஞ்சையும் தொட்டது. தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை அழித்தொழித்து ஆயிரமாயிரமாய் எமது உறவுகளை முள்ளிவாய்க்காலில் சங்காரம் செய்த சிங்களப்படைகளின் கோரமுகத்தையும் அதிலிருந்து மீண்டும் எழுந்து எம் மாவீரர்களின் ஈழக்கனவினை நனவாக்கும் போரில் சத்தியம் செய்துகொள்ளும் கருப்பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் மிகவும் உணர்வுபூர்வமானதாக பார்த்தவர்கள் எல்லோரையும் சிலிர்க்கவைத்தது.

அடுத்தநிகழ்வாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு சபேசன் சண்முகம் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் மெல்பேர்னில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தாயகமக்களுக்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும் பேசினார்.

இடைவேளையை தொடர்ந்து, சிறுமி அபிதாரணி சந்திரன் தாயக அவலத்தை பிரதிபலிக்கும் ”ஏன் இந்தக் கோலம்” என்ற தனி நடிப்பை வழங்கி இருந்தார். தாயகமக்களுக்கு புலத்து வாழ் மக்கள் உதவவேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அச்சிறுமியின் நடிப்பு நிறைவாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது.

இறுதி நிகழ்வாக, ”பயணம்” என்ற குறும்படம் அகலத்திரையில் காண்பிக்கபட்டது. தாயகமக்கள் சந்தித்த அவலவாழ்வை சித்தரித்தது அக் குறும்படம்.

மாலை 7.30 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

நேற்றைய நிகழ்வின் இன்னொரு முக்கிய விடயமாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ன் கிளையினர் வெளியிட்ட ”காந்தள் 2011” மாவீரர் நினைவுதின சிறப்பிதழ் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.