அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி இளைஞர் தூக்கத்தில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அவரது மருத்துவரான தாயார் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

தமது மகன் இறந்ததற்கு காரணமான அந்த நிலை தொடர்பில் மருத்துவரான தமக்கு தெரிந்திருக்கவில்லை என்பது வெட்கக்கேடானது என அவர் கண்கள் கலங்க தெரிவித்துள்ளார்.

சிட்னியில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் மருத்துவர் Anny Marrett. இவரது 29 வயது மகன் ஜார்ஜ் என்பவரே தமது குடியிருப்பில் வைத்து தூக்கத்தில் மரணமடைந்துள்ளார். இளைஞர் ஜார்ஜுக்கு 14 வயது முதலே வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. தாயார் மருத்துவர் என்பதால் உரிய சிகிச்சையும் அவர் மேற்கொண்டு வந்துள்ளார்.

தமது மகன் ஜார்ஜுக்கு Citibank போன்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது நீண்டகால கனவாக இருந்தது எனக் கூறும் மருத்துவர் மாரெட், இதனால் சரியான தூக்கம் இன்றி இடைவிடாது பணியாற்றியும் வந்துள்ளார். சம்பவத்தன்று நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்று, மது அருந்தியுள்ளார்.

இதனால் தமக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள தவறியுள்ளார். விருந்து முடித்து குடியிருப்புக்கு திரும்பியவர், நண்பர்கள் வெளியே சென்றுள்ளதால் தனியாக படுத்து தூங்கியுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் அவர் எழவே இல்லை என மருத்துவர் மாரெட் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். திங்களன்று ஜார்ஜின் நண்பர்களே மருத்துவர் மாரெட்டுக்கு தமது மகன் தொடர்பில் தகவல் அளித்துள்ளனர்.

30-வது பிறந்தநாளுக்கு இன்னும் 2 மாதமே எஞ்சியுள்ள நிலையில் ஜார்ஜின் மறைவு தம்மை உலுக்கியுள்ளதாக கூறும் மருத்துவர் மாரெட், தமது மகனின் இழப்புக்கு காரணம் SUDEP (sudden unexpected death in epilepsy) எனவும், ஆனால் இதுபோன்ற ஒரு நிலை தொடர்பில் மருத்துவரான தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தமது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

வலிப்பு நோய் காரணமாக ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் தூக்கத்தில் மரணமடைவதாக கூறும் மருத்துவர் ஒருவர், ஆனால் இது தொடர்பான விழிப்புணர்வு இன்னும் பொதுமக்களிடையே இல்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.