ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின்கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ்மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்கான இறுதி முடிவினை நாளை மறுதினம் 30 ஆம் திகதி எடுக்கவுள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுப்பதற்கான 5 தமிழ்அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிரைட் இன் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி மூன்றரை மணி நேரம் இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம். தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான தேசியக் கட்சிகள் தமிழ் தேசியக் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடுகள் விரிவாக ஆராயப்பட்டது.
ஏனெனில் எமது கோரிக்கைகள் எண்பது ஒரு நாட்டுக்குள் தமிழர்க்ளுக்கு இனப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய விதமாக மட்டுமல்லாது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடிகளை தீர்ப்பதற்கே கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் தென்னிலங்கையில் உள்ள பிரதான தேசியக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் எமது கோரிக்கைகளை இனவாத கோரிக்கைகளாக பூதாகரமாக காட்டுகின்றனர்.
இந்தக் கட்சியினர் எமதுகோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவர். எமது ஐந்து தேசியக் கட்சிகளின் இறுதி நாளை மறுதினம் (30) ஆம் திகதி கூடி ஆராய்ந்து எடுக்கப்படும். எமது இறுதி முடிவுகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதேவேளை குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன்தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்குமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,ஈ.பி.ஆர்.எல்.எப்சார்பாக அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்றஉறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் சார்பாக அதன் தலைவரும் பாராளுமன்றஉருப்பினருமான த.சித்தார்தன், ரெலோ சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்ச.குகதாஸ், மூத்த உறுப்பினர் கென்ரி மகேந்திரன், தமிழ்மக்கள் கூட்டணி சார்பாக அதன் ஊடக பேச்சாளர் த.அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal