மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு – 2017

தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி திங்கட்கிழமையன்று மெல்பேணில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மெல்பேண் நேரம் மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் துளசி (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு.பிரான்ஸிஸ் கிறிஸ்ரி அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக் கொடியினை மாவீரர் லெப்.கேணல் மணிவண்ணனின் சகோதரர் திரு.சிங்கராசா சுரேஷ்குமார் அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியினை மாவீரர் லெப்.கேணல் சதன் / இளமாறனின் புதல்வன் திரு. பவித்திரன் சிவநாதன் அவர்களும் ஏற்றி வைத்தார்கள். அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. முதலாவது மாவீரன் லெப். சங்கரின் திரு உருவப்படத்திற்கு திரு. சசிகரன் வடிவேலு அவர்களும், முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் திரு உருவப்படத்திற்கு திருமதி சாரதா இருதயநாதர் அவர்களும் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள்.

கொடியேற்றலைத் தொடர்ந்து அகவணக்கமும், தேசத்திற்காய் விதையான வீர மறவர்களுக்கான மலர்வணக்கமும் இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோரும் உரித்துடையோரும் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர்.தொடர்ந்து மண்டபம் நிறைந்திருந்த மக்கள் கூட்டத்தினர் தமது மலர்வணக்கத்தைச் செலுத்தினர். மலர்வணக்கநிகழ்வின் போது தாயக துயிலுமில்லக் காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீர்ர் பாடல்களும், மாவீ­ரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரைகளில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து, துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த மக்கள் அனைவரும், அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக ஒன்றித்திருந்தனர்.

நிகழ்வில் மாவீரர்களை நெஞ்சிலிருத்தி தமிழீழ விடுதலைக்காக அனைவரும் அயராது உழைப்போம் என உறுதிமொழியுரையினை திரு.ரகு கிரிஷ் அவர்கள் வழங்க மக்களும் உறுதியெடுத்தைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலில் நடனாலயா நடனப் பள்ளி மாணவர்கள் வழங்கிய மாவீரர் வணக்க நடனம் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து மாவீரர்நாள் சிறப்புரையினை திரு உமேஸ் பேரின்பநாயகம் அவர்கள் வழங்கினார். இன அழிப்பு தொடர்பாக சட்டத்துறை ஆய்வை நியூசிலாந்தில் மேற்கொண்டுள்ள உமேஸ், இனவழிப்பு தொடர்பாக மேற்குலகம் கையாளும் நடைமுறை-களையும், ஈழத்தமிழர் விடயத்தில் உள்ள நிலைமைகளையும் விளக்கினார். அத்தோடு, சட்டத்துறையை விட சமாந்தரமாக எமக்கான ஆதரவுத்தளங்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவையினைச் சுட்டிக்காட்டினார். தமிழ் இளையோர்களின் பங்களிப்பை இன்றைய எமது அரசியல் வெகுவாகக் கோரி நிற்பதைச் சுட்டிக்காட்டினார்.

அடுத்த்தாக நவசக்தி நாட்டியாலய மாணவி வழங்கிய “காற்றாகி வருகிறேன்“ எனும் மாவீரர் நினைவு சுமந்த நடனம் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து மாவீரர் நினைவுரையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மெல்பேண் பிரதிநிதி திரு. டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் நிகழ்த்தினார். எம் மான மாவீரர்களின் ஈகம், புலம்பெயர் வாழ் மக்களின் தாயக விடிற்கான செயற்பாடுகள், சமகால அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட விடயங்களைத் திரு.டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

அரங்கு நிறைந்த, பெருமளவான தமிழீழ உணர்வாளர்கள் இந் நிகழ்விற்கு வருகை தந்து உணர்வெழுச்சியுடன் பங்குபற்றினார்கள். இறுதியில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு இரவு 8.20 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுப்போடு நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர் நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது. இதேநேரத்தில் சமகாலத்தில் ஓஸ்ரேலியாவின் ஏனைய மாநில நகரங்களான சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த் இல் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவினான மக்கள் பங்களிப்புடன், மிகவும் உணர்வுமயமாக நடைபெற்று, எழுச்சியுடன் நிறைவுபெற்றுள்ளது.