இங்கிலாந்தில் மர்மநபர்களின் கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் பலி!

இங்கிலாந்தில் விருந்துபசாரமொன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

இச் சம்பவத்தில் 17 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இளைஞர்கள் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது 17 வயதுடைய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரு தரப்பினருக்கிடையில் இருந்த முன்விரோதமே கொலைச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.