காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடிவு!

உள்நாட்டு யுத்தம் காரணமாகக் காணாமல் போனவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களுக்கு, மாதாந்தம் 6,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார்.

திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற விசேட தேவையுடையோர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.

இதற்கான சுற்றுநிருபம் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், காணாமல்போனவர்களுடைய புகைப்படத்துடன் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகங்களின் ஊடாக மாவட்டச் செயலகம் முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறினார்.