மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட தங்கத்தில் ஒரு தொகையை கடற்படைக்கு…..!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய,    அனுராதபுரம்  ‘ சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் வைப்பதற்காக  தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ்.  மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில்  8 கிலோவை  கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விஷேட விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

இந்த 8 கிலோ தங்கத்தை பயன்படுத்தி ஒரு புத்தர் சிலையும், இதற்கு மேலதிகமாக இலங்கை வங்கி வழங்கியுள்ளதாக கூறப்படும் மூன்றரை கிலோ தங்கத்தின் ஊடாக தங்க போதியொன்றும் அமைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவின் விசாரணை அறை இலக்கம் 8 இன் பொறுப்பதிகாரி காவல் துறை  பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோ கோட்டை நீதிவானுக்கு இன்று அறிவித்தார்.

இதனைவிட பித்தளையால் செய்யப்பட்ட இரண்டரை அடி உயரமான சிலை, ஒன்றரை அடி உயரமான சிலை,  ஒரு அடி உயரமான தங்க முலாம் பூசப்பட்ட சிலை, தங்க நூல், தங்க தகட்டிலான அதிகார பத்திரம், 240 கிராம் தங்க பாதம்  ஆகியனவும் இதன்போது செய்யப்பட்டுள்ளமையை எப்.சி.ஐ.டி. கண்டறிந்துள்ளதாக பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோ நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இவ்வாறு  செய்யப்பட்ட சிலைகள் உள்ளிட்டவற்றில் அனுராதபுரம் ‘ சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபிக்குள்  தங்க புத்தர் சிலை, தங்க போதி ஆகியவற்றை தவிர ஏனைய எதுவும் இல்லை என அவர் இதன்போது சுட்டிக்கடடினார்.

யாழ்.  மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில்  8 கிலோவை  கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம்  ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர்  தாரக செனவிரத்ன  ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே மேலதிக விசாரணை அறிக்கையுடன் மன்றில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோ இந்த விடயங்களை மன்றுக்கு அறிவித்தார்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம்  ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர்  தாரக செனவிரத்ன ஆகியோரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.