மோடியை குறி வைக்கும் பயங்கரவாதிகள்!

காஷ்மீர் பிரச்சினைக்கு பழி தீர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பயங்கரவாதிகளின் சதி திட்டம் தீட்டியிருப்பதாக வெளிநாட்டு உளவு அமைப்பு கண்டுபிடித்ததுள்ளது.

காஷ்மீர் பிரச்சினையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காஷ்மீர் மாநிலத்துக்கு 370-வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது.

காஷ்மீரில் வன்முறைகள் தொடரக்கூடாது என்பதற்காக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களை கைது செய்து சிறை வைத்துள்ளனர். மோடியின் இந்த துணிச்சலான நடவடிக்கை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் வன்முறைகள் நடத்துவதற்கு ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கத்தையே பாகிஸ்தான் நம்பி உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை மத்திய அரசு கணிசமாக வேட்டையாடி விட்டது. 300-க்கும் மேற்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை வழிநடத்தி வந்த உஸ்மான் ஹைய்தர் (மசூத்அசார் உறவினர்) என்பவனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் பாலகோட் முகாமை குண்டு வீசி அழித்தது. அதில் 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் அடுத்தடுத்து பெரும் இழப்பை சந்தித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பிரதமர் மோடி மீதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மீதும் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அழித்ததோடு அவர்களது முகாம்களையும் குறி வைத்து அழித்ததில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் அவர் மீது பயங்கரவாதிகளுக்கு அதிக ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று துடித்தபடி உள்ளனர்.

பாலகோட் முகாம் அழிப் புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சிகள் அனைத்தையும் எல்லை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.

இந்த நிலையில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகளின் பார்வை பிரதமர் மோடி மீதும்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மீதும் திரும்பி உள்ளது. அவர்கள் இருவரையும் தற்கொலை தாக்குதல் மூலம் கொல்ல வேண்டும் என்று பயங்கர சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

தங்களது இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாதிகள் தனிக்குழு ஒன்றை உருவாக்கி உள்ளனர். அந்த தற்கொலை பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பும் முயற்சிகளில் தற்போது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கோப்பு படம்

பயங்கரவாதிகளின் இந்த சதி திட்டத்தை சமீபத்தில் சர்வதேச உளவு அமைப்பு ஒன்று கண்டுபிடித்தது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவனான சம்சர்வானியும் அவனது கூட்டாளியும் நடத்திய உரையாடலை இடைமறித்து கேட்டபோது இந்த சதி திட்டத்தை வெளிநாட்டு உளவு அமைப்பு கண்டுபிடித்தது.

பயங்கரவாதிகளின் அந்த உரையாடல் கையெழுத்து வடிவில் இருந்தது. இதன் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பிரதமர் மோடி உயிருக்கு குறி வைத்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் இந்த சதி திட்டத்தை மத்திய அரசுக்கு அந்த வெளிநாட்டு உளவு அமைப்பு சமீபத்தில் தெரிவித்து எச்சரித்தது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் சதி திட்டத்திற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசியமாக பின்னணியில் இருந்து இயக்குவதும் தெரிய வந்துள்ளது.

இந்த செப்டம்பர் மாதமே இந்த அதிரடி தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது வெளிநாட்டு உளவு அமைப்பு மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இன்று (செப்டம்பர் 25) முதல் 30-ந்தேதிக்குள் தங்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பயங்கரவாதிகள் முடிவு செய்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றி மத்திய உள்துறை மிக தீவிரமாக கவனத்தில் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுக்கும் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த அறிவுத்தப்பட்டுள்ளது.

அஜித்தோவலுக்கு தற்போது இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த பாதுகாப்பை மேலும் அதிகரிக்கலாமா? என்று மத்திய உள்துறை ஆலோசித்து வருகிறது.

மோடி, அஜித்தோவல் உயிர்களுக்கு குறிவைத்திருப்பதோடு காஷ்மீரில் 4 இடங்களை தகர்க்கவும் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. பதன்கோட் விமான தளம், உதம்பூர் ராணுவ முகாம் உள்பட 4 இடங்களுக்கு பயங்கரவாதிகள் குறி வைத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த 4 ராணுவ நிலைகளையும் மத்திய உள்துறை உஷார் படுத்தி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பதன்கோட் விமான தளத்துக்குள் புகுந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 3 நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். அத்தகைய தாக்குதல் மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 4 ராணுவ நிலைகளும் “ஆரஞ்சு அலார்ட்” எனும் பிரிவில் அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே முக்கிய ராணுவ நிலைகளை தகர்க்க முடியாவிட்டால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களில் கைவரிசை காட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சுமார் 30 நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்த 30 நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த மாநில போலீசாருக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது. இவை தவிர ரெயில் நிலையங்களில் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.