விஜய்யின் அடுத்த படத்தில், அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கிவரும் ‘பிகில்’ படத்தில் தன் பணிகளை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்துக்காகத் தயாராகி வருகிறார் விஜய். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரம் படப்பிடிப்பு என்பதால், நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கால்ஷீட் தேதிகள் பிரச்சினையால் யார் நாயகி என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பல்வேறு மொழிகளின் முன்னணி நாயகர்களிடம் பேசினர். எல்லோருமே வெவ்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால், இறுதியாக விஜய் சேதுபதியிடம் பேசியுள்ளனர். அவருக்கு கால்ஷீட் பிரச்சினை இருந்தாலும், அதை சரிசெய்து நடிக்கலாம் என்று விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது அவருடன் சம்பளப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும், இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார்.
‘பிகில்’ படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
Eelamurasu Australia Online News Portal