நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா?

பிரபல இந்தி நடிகை ஜியாகான். இவர் தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார்.
ஜியாகான் 2013-ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இந்த மன வேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளும் இதனை உறுதிபடுத்தினர்.
ஆனால் ஜியாகான் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறிவந்தனர். இந்த நிலையில் ஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் அறிக்கையை தற்போது சமர்ப்பித்து உள்ளனர்.
அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.