கோண்டாவில் வீட்டில் புகுந்து வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்!

கோண்டாவில் அந்நங்கைப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே வன்முறையில் ஈடுபட்டது. குறித்த நால்வரும் தமது முகங்களை மூடி கட்டி இருந்தார்கள் என வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

வீட்டினுள் புகுந்து வன்முறை கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்த வேளை வீட்டிலிருந்தவர்கள் அவலக் குரல் எழுப்பிய போது அவர்களை வாளினை காட்டி மிரட்டியதாகவும் , அவலக் குரல் கேட்டு உதவிக்கு வந்த அயலவர்களையும் வாள்களைக் காட்டி மிரட்டி விட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறை  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.