தமிழ் குடும்பத்தை நாடு கடத்த தயாராகின்றது அவுஸ்திரேலியா!

ஏபிசி

தமிழில் – ரஜீபன்

தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா நாடு கடத்துவதற்கு தயாராகும் அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தமிழர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஏபிசி நியுஸ் மேலும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் குயின்ஸ்லாந்தின் பைலோ நகரிலிருந்து தமிழ் குடும்பத்தினை இலங்கைக்கு நாடு கடத்த தயாராகின்றது அதேவேளை அவர்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என அவர்களிற்கு சார்பாக குரல்கொடுப்பவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு வயது தருணிகாவே இந்த விவகாரத்தில் முக்கியமானவராக காணப்படுகின்றார்

எனினும் இரண்டுவயது மகள் தொடர்பான மனு வெற்றியளிக்காது என அரச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் என்ன ஆபத்தை எதிர்கொள்கின்றனர் சமீபத்தைய அரசியல் நிலவரங்கள் அவர்களை இன்னமும் அதிகளவிற்கு பாதிக்குமா என்ற கேள்வி காணப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் கணக்காளருமான ரமாநாதன் ஸ்ரீகணேஸ்வரன் வடக்கில் பாரியளவில் இராணுவமயப்படுத்தபட்ட சூழலில் தாங்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நான் காவல்துறையினரால் இலக்குவைக்கப்பட்டேன் என்னை விசாரணை செய்தனர் துன்புறுத்தினர் என அவர் தெரிவித்தார்.

அவர்கள் எனது வீட்டிற்குள்  நுழைந்து நான் எங்கிருக்கின்றேன் என எனது மனைவியிடம் கேட்டனர்,என தெரிவித்துள்ள அவர் பின்னர் அவர்கள் தன்னை விசாரணை செய்ததாகவும் தொலைபேசி இலக்கங்களை காண்பித்து கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உண்மைகளை பேசும் தமிழர்களிற்கு இதுவே இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை தொடர்ந்து பாதித்து வரும் காணாமல்போனவர்களின் விவகாரத்தினை நான் பதிவு செய்துள்ளேன் என அவர் குறிப்பிடுகின்றார்.

கணவன்மார்கள் காணாமல்போகச்செய்யப்பட்ட இளம் பெண்கள் திருமணம் செய்ய மறுக்கின்றனர் தந்தையை இழந்த சிறுவர்கள் தவிக்கின்றனர் என அவர் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு  உரிய தீர்வு காணப்படும் வரை நாங்கள் தொடர்ந்தும் வரை அச்சநிலை எங்கள் வாழ்க்கையிலிருந்து அகலாது எனவும்  அவர் தெரிவிக்கின்றார்.

நாங்கள் எப்போதும் பச்சை சீருடைகளையும் தயாரான நிலையில் துப்பாக்கிகளையும் தமிழ் மக்களின் பகுதிகளில் புதிதாக உருவாகிவரும் புத்தர்சிலைகளையும்  காண்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார்

தொடரும் சித்திரவதைகள் காணாமல்போதல் குறித்த தகவல்கள்

யுத்தத்தின் இறுதி நாட்களில் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவோம் என்ற வாக்குறுதிகாரணமாக நூற்றுக்கணக்கான  விடுதலைப்புலிகள் சரணடைந்தனர்.பேருந்துகளில் ஏற்றப்பட்ட அவர்களை அதன் பின்னர் அவர்களது குடும்பத்தவர்கள் ஒருபோதும் காணவில்லை.

காணாமல்போனமை ஆழமான உளவியல் காயங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் யுத்தம் முடிவடைந்த பல வருடங்களின் பின்னரும் காணாமல்போதல் சித்திரவதைகள் தடுத்து வைக்கப்படுதல் தொடர்வதாக ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், தொடரும் சித்திரவதைகள் குறித்து பதிவு செய்துள்ளது.2015 முதல் 2017 வரை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட 75 பேரின்  வாக்குமூலங்களை அந்த அமைப்பு பதிவு செய்துள்ளது.இவர்களில் பலர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலிற்கு உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சிட்னியில் உள்ள  அகதிகள் தொடர்பான அமைப்பின் சட்டத்தரணி இசபெல் மகாரிட்டி தங்களிடம் வந்த தமிழ் மக்களின் வாக்குமூலங்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுதல்,துன்புறுத்தல் சித்திரவதை  போன்றன தொடர்ந்தும் காணப்படுவதை புலப்படுத்துவதாக தெரிவிக்கின்றார்.

நடேஸ்பிரியா தம்பதியின் பாதுகாப்பை உறுதிசெய்யமுடியாது என்கின்றார் பேர்ள் அமைப்பின் மரியோ அருள்தாஸ்.

எப்போதாவது இந்த சம்பவங்கள் இடம்பெறுகின்றன என தெரிவிப்பது உண்மையில்லை என்கின்றார் அவர்.

யுத்த குற்றச்சாட்டுகளின் மத்தியின் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் தொடர்கின்றது

சமீபத்தைய இராணுவ அரசியல் சூழ்நிலை குறித்தும் தமிழர்கள் கவலையடைந்துள்ளர்.

கடந்த மாதம் யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான சவேந்திரசில்வா இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டார்.

இதனை தவிர விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவேந்திர சில்வாவின் பதவி உயர்வும்  ராஜபக்ச குடும்பத்தின் மீள் எழுச்சியும் தமிழ் மக்களிற்கு அச்சம் தரும் செய்தியை தெரிவித்துள்ள என்கின்றார் சர்வதேச நெருக்கடி குழுவின்  இலங்கை குறித்த ஆராய்ச்சியாளர் அலன் கீனன்.

இலங்கையின் கடந்த முப்பது வருட கால வரலாற்றில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான அட்டுழீயங்கள் மற்றும் அநீதி சம்பவங்களிற்கு எவரையும் பொறுப்புக்கூறச்செய்வது குறித்து இலங்கை படையினரும் அரசியல்வாதிகளும் அக்கறை கொண்டிருக்கவில்லை என்ற செய்தியை சமீபத்தைய சம்பவங்கள் தமிழ் மக்களிற்கு தெரிவித்துள்ளன எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் ஒடுக்குமுறைகள் அதிகரி;க்கலாம் எனவும் அலன்கீனன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களம், உள்விவகார திணைக்களம் ஆகியவற்றிடம் கேள்வி எழுப்பிய போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை.