அவுஸ்ரேலிய அரசு 900 ஆண்டுகள் பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைத்தது

900 ஆண்டுகள் பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை அவுஸ்திரேலிய அரசு மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவிடம் முறைப்படி ஒப்படைத்தது.

2005-ம் ஆண்டு 8,40,000 அமெரிக்க டாலர்கள்(ரூ.5½ கோடி) மதிப்புள்ள பழங்கால 3 அபூர்வ சிற்பங்களை இந்தியாவின் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நடத்தி வந்த கலைக்கூடத்தில் இருந்து அவுஸ்ரேலியாவின் தேசிய கலைக்கூடம் விலைக்கு வாங்கியது.

இவற்றில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரித்தியங்கரா தேவி சிலை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வரும் கற்சிலை என்று நம்பப்படுகிறது. 2-வது சிற்பம் 3-ம் நூற்றாண்டில் பாறையில் செதுக்கப்பப்பட்ட புத்தரை வழிபடுவோர் சிற்பம் ஆகும். 3-வது சிற்பம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய, அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை.

இந்த 3 கலைப்பொருட்களையும் மீட்க இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. இவற்றை திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியாவும் ஒப்புக் கொண்டது. இதையடுத்து அவுஸ்ரேலிய அரசு இந்த 3 சிற்பங்களையும் நேற்று கான்பெர்ரா நகரில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவிடம் அவுஸ்ரேலியாவின் கலைத்துறை மந்திரி மிட்ச் பிபீல்டு முறைப்படி ஒப்படைத்தார். இதில் அவுஸ்ரேலியாவுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரியும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மகேஷ் ஷர்மா, இந்த 3 சிற்பங்களும் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றார்.