பரோலை நீட்டிக்க கோரி மனு அளிக்க நளினி முடிவு

நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து தமிழகம் வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன்-நளினி உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் உள்ளனர்.

நளினி, முருகன் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்காக நளினி கடந்த 25-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நிபந்தனைகளுடன் பரோலில் வந்தார். தற்போது வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் திராவிட இயக்க தமிழர் பேரவை பிரமுகர் வீட்டில் தங்கியுள்ளார்.

இவர் சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை நளினி சந்தித்து பேசினார். அப்போது மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து தமிழகம் வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நளினி தாயார் பத்மா

இதுகுறித்து சத்துவாச்சாரியில் நளினியுடன் தங்கியுள்ள அவரது தாயார் பத்மா கூறியிருப்பதாவது:-

28 ஆண்டுகளுக்கு பிறகு எனது மகள் நளினி, பேத்தி ஹரித்ராவின் திருமண எற்பாடுகள் செய்ய ஒருமாதம் பரோலில் வந்துள்ளார். இதுவரை பேத்திக்கு மணமகனாக 4 பேரை பார்த்து வைத்துள்ளோம். பேத்தி ஹரித்ராவிடம் காண்பித்து மணமகன் இறுதி செய்யப்பட உள்ளார்.

லண்டனில் உள்ள பேத்தி ஹரித்ராவுக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு முடிந்த பிறகு தான் தமிழகத்திற்கு வர உள்ளார்.

இதற்கிடையே நளினிக்கு ஒருமாதம் பரோல் முடிவடைய உள்ளதால் மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்க கோரி நளினி தரப்பில் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

ஏற்கனவே ஒரு கைதிக்கு 6 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பரோலை அதிகரிப்பது குறித்து தகவல் சேகரித்து வருகிறோம்.

6 மாதம் பரோல் நீட்டிக்க விண்ணப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

நளினிக்கு கோர்ட்டு மூலமாக பரோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பரோல் நீட்டிப்பு தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டு பரோல் நீட்டிக்காவிட்டால் வரும் 25-ந்தேதி மாலை வேலூர் பெண்கள் சிறைக்கு நளினி திரும்ப வேண்டும் என்றனர்.